கிரீஸ் நாட்டில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 5 பேர் பலி; 20 பேர் மாயம்!
மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல முயன்ற அகதிகளின் கனவு, நடுக்கடலில் படகு கவிழ்ந்து நேர்ந்த விபத்தால் சோகத்தில் முடிந்துள்ளது.
கிரீட் தீவின் தெற்கு கடற்கரைப் பகுதியில் இந்த மரப் படகு கவிழ்ந்தது. விபத்தின்போது படகில் சுமார் 50 பேர் இருந்ததாகத் தப்பித்தவர்கள் தெரிவித்துள்ளனர். நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அகதிகளுக்கு உதவ ஒரு வணிகக் கப்பல் அருகில் வந்தது. அப்போது படகில் இருந்தவர்கள் ஒரே நேரத்தில் ஏணி வழியாகக் கப்பலில் ஏற முயன்றதால், பாரம் தாங்காமல் படகு ஒரு பக்கமாகச் சாய்ந்து கவிழ்ந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மற்றொரு சரக்கு கப்பல் 20 பேரை உயிருடன் மீட்டது. கடலோர காவல் படையினர் நடத்திய சோதனையில் 5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. காணாமல் போன எஞ்சிய 20 பேரைத் தேடும் பணியில் கடலோர காவல் படையின் 4 ரோந்துப் படகுகள், ஒரு ஹெலிகாப்டர் மற்றும் ராணுவ விமானம் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.அகதிகள் மற்றும் புகலிடம் தேடுவோர் லிபியாவிலிருந்து கிரீஸ் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல முயல்வது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 16,770-க்கும் மேற்பட்டோர் இதே தடத்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு கிரீட் தீவை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!