பெரும் சாதனை... 42 நாட்களில் 13,625 வழக்குகளை முடித்து வைத்த நீதிபதி!
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி அவர்கள், மூன்று ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்த, 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய 13,625 வழக்குகளை வெறும் 42 வேலை நாட்களுக்குள் விசாரித்து முடித்து வைத்துப் பெரும் சாதனை படைத்துள்ளார்.
3 ஆண்டுகள் தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகள், 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்தால், அதை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில், அந்த வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பை நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி ஏற்றார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குட்பட்ட மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து மொத்தம் 20,985 வழக்குகள் இந்தச் சிறப்பு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்குகளில், அக்டோபர் 29ஆம் தேதி வரை, வெறும் 42 வேலை நாள்களில் 13,625 வழக்குகள் விசாரித்து முடித்துவைக்கப்பட்டன. மேலும், 7,357 வழக்குகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களின் விசாரணைக்காக மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டன.
விசாரிக்கப்பட்ட வழக்குகளில் சுமார் 20 சதவீதம் விபத்து வழக்குகள் என்பது தெரிய வந்தது. அதில், பெரும்பாலானவை அதிக சக்தி கொண்ட இருசக்கர வாகனங்கள் சம்பந்தப்பட்டவை. இதன் அடிப்படையில், நீதிபதி ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தார்:
இதுபோன்ற வாகனங்களை ஓட்டுவதற்கு கூடுதல் ஓட்டுநர் திறன் பரிசோதனை நடத்த வேண்டுமா என்பது குறித்து ஆராய, நிபுணர்கள் மற்றும் வாகன உற்பத்தியாளர்கள் அடங்கிய ஒரு நிபுணர் குழுவை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை 3 மாதங்களுக்குள் அமைக்க வேண்டும்.
மேலும், மோட்டார் வாகன விபத்துகளுக்கு இழப்பீடு பெறுவது குறித்துப் பலருக்கும் தெரியவில்லை என்று விசாரணையில் தெரியவந்ததால், இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு பொதுமக்களிடம் கட்டாயம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
உரிய நபர்கள் இழப்பீடு பெறும் வரை வழக்கு ஆவணங்களைச் சட்டப் பணிகள் ஆணைக் குழுவிடம் வழங்கி, சட்ட உதவி பெறுவதற்கான ஏற்பாடுகளை விசாரணை அதிகாரிகள் செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இத்தகைய வழக்குகளை முடித்துவைக்க ஒத்துழைப்பு வழங்கிய அரசு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்களுக்கும் நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!