அடுத்த மாதம் 3 முறை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி... அதிமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் மூன்று முறை தமிழகம் வரத் திட்டமிட்டுள்ளார்.
இந்த முறை தமிழகத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவ உள்ளது. இதில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி அணி), தமாகா உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டணிக்கு வலு சேர்க்கும் வகையில் பிரதமரின் வருகை அமையவுள்ளது.
மார்ச் 1ம் தேதியன்று மதுரையில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுத் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார். முதலில் மார்ச் 6 எனத் திட்டமிடப்பட்டு, பின்னர் மார்ச் 7-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ள வேலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார். இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மார்ச் 11-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களான திருச்சி மற்றும் தஞ்சாவூரில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பிரதமர் கலந்து கொள்கிறார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடி தமிழகத்திற்கு மூன்று முறை வருவது, தமிழகத்தின் மீதான பாஜகவின் கவனத்தை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் வலுவாகக் களம் இறங்கியுள்ள சூழலில், பிரதமரின் இந்தப் பிரசாரப் பயணங்கள் தேர்தல் முடிவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளும் இணைவது குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், மார்ச் மாதத் தொடக்கத்திலேயே கூட்டணிக் கணக்குகள் முழுமையடையும் எனத் தெரிகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!