அரசு ஊழியர்களுக்கு 'ஷாக்'... 50% அகவிலைப்படி இணைப்பு கிடையாது? நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance - DA) தற்போது 50 சதவீதத்தை எட்டியுள்ள நிலையில், அதனை அடிப்படை சம்பளத்துடன் (Basic Pay) இணைக்கும் எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது, அடிப்படைச் சம்பள உயர்வுக்காகக் காத்திருந்த அரசு ஊழியர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். அதில், "தற்போதைய நிலையில், அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் எந்தவொரு திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தைச் சமாளிப்பதற்காகவே அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இது தொழிலாளர் அமைச்சகம் வெளியிடும் குறியீட்டின் (AICPI-IW) அடிப்படையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுவதால், அதை அடிப்படைச் சம்பளத்துடன் இணைக்கும் உத்தேசம் இல்லை என்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
அகவிலைப்படி 50 சதவீதத்தைத் தாண்டும்போது, அதை அடிப்படைச் சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என்பது மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் நீண்டகாலக் கோரிக்கையாகும். அகவிலைப்படியை அடிப்படைச் சம்பளத்துடன் இணைத்தால், ஊழியர்களின் அடிப்படை ஊதியம் உயரும். அதற்கேற்ப வீட்டு வாடகைப்படி (HRA) உள்ளிட்ட இதர சலுகைகளும் கணிசமாகக் கூடும்.
8வது சம்பள கமிஷன் 2026-ல் அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், அதற்கு முன்பே இந்த இணைப்பு அமலாகும் என ஊழியர்கள் நம்பியிருந்தனர். அரசின் இந்த அறிவிப்பு அந்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதற்கிடையில் 8-வது சம்பள கமிஷனின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழு அடுத்த 18 மாதங்களில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்றும், அதன்பிறகு ஜனவரி 1, 2026 முதல் புதிய சம்பள விகிதம் அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!