வாலிபர் மரணத்தில் திடீர் திருப்பம்... இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்ததால் உறவினர்கள் அடித்துக் கொன்றது அம்பலம்!
கோவையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு வாலிபரின் மரணம், தற்போது அதிர்ச்சியூட்டும் கொலை வழக்காக மாறியுள்ளது. கோவையை அடுத்த கணபதி பகுதியைச் சேர்ந்த ஜீவா (25) என்பவரின் மரணத்தில் மறைக்கப்பட்டிருந்த உண்மைகளை அவரது அண்ணன் வெளிக்கொண்டு வந்துள்ளார். முதலில் விபத்து என்று பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, தற்போது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஜீவா தான் வசித்து வந்த வாடகை வீட்டின் அருகே பெண் ஒருவர் குளிப்பதைத் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த அந்தப் பெண்ணின் உறவினர்கள் கடும் ஆத்திரமடைந்து, ஜீவாவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் அவருக்குத் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, காயத்திற்கான காரணம் குறித்துக் கேட்ட மருத்துவர்களிடம் தான் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததாக ஜீவா தெரிவித்துள்ளார். இத்தனைக்கும் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தியபோது கூட, அவர் தனது வாக்குமூலத்தை மாற்றாமல் பைக்கில் இருந்து விழுந்ததாகவே எழுதிக் கொடுத்துள்ளார். ஒருவேளை அவமானம் மற்றும் பயம் காரணமாக அவர் உண்மையை மறைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஜூன் 26ம் தேதி ஜீவா உயிரிழந்தார்.
ஜீவாவின் இறப்புக்குப் பிறகு அவரது அண்ணன் நடத்திய தனிப்பட்ட விசாரணையில், பெண்ணின் உறவினர்கள் தாக்கியதால் தான் ஜீவா பலியானார் என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து கோவை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்தார். இந்த வழக்கைச் சாதாரண விபத்து வழக்காகக் கருதாமல், கொலை வழக்காக மாற்றிக் கமிஷனர் உத்தரவிட்டார். தற்போது சரவணம்பட்டி போலீசார் இந்த விவகாரத்தைத் தீவிரமாகக் கையில் எடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!