மின்சார வாகனங்களுக்கு 100% சாலை வரி விலக்கு மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பாணை வெளியீடு!
தமிழகத்தில் மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு வழங்கப்பட்டு வந்த சாலை வரி விலக்கு சலுகை இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அதனை மேலும் நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜனவரி 1, 2026 முதல் டிசம்பர் 31, 2027 வரை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த வரி விலக்கு அமலில் இருக்கும். தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் வணிக ரீதியான போக்குவரத்து வாகனங்கள் என அனைத்து வகை மின்சார வாகனங்களுக்கும் இந்த 100% வரி விலக்கு பொருந்தும்.
புகையில்லா போக்குவரத்தை ஊக்குவித்து, ‘தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023’-ன் இலக்குகளை எட்டுவது அரசின் முக்கிய நோக்கமாகும். தமிழகத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாடு 2025-ம் ஆண்டில் 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியைத் தக்கவைக்க வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் போக்குவரத்து ஆணையர் விடுத்த கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது.
புதிதாக மின்சார கார் அல்லது இருசக்கர வாகனம் வாங்குவோர், வாகனப் பதிவின் போது செலுத்த வேண்டிய சாலை வரியை முழுமையாகச் செலுத்தத் தேவையில்லை. இதனால் வாகனத்தின் 'ஆன்-ரோடு' விலை கணிசமாகக் குறையும், இது சாமானிய மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!