பெங்களூருவில் பயங்கரம்... திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் தற்கொலை!
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு மல்லசந்திரா பகுதியில், கணவரின் தொடர் துன்புறுத்தல் காரணமாக 26 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவரது கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகமங்களாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா (26) என்பவருக்கும், லிகித் சிம்ஹா என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் பிரம்மாண்டமாகத் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு பெங்களூரு மல்லசந்திரா பகுதியில் இவர்கள் வசித்து வந்தனர். வாழ்க்கை தொடங்கி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், லிகித் சிம்ஹாவிற்குத் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
நடத்தையில் சந்தேகப்பட்ட லிகித் சிம்ஹா, ஐஸ்வர்யாவைத் தொடர்ந்து அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். இது குறித்து ஐஸ்வர்யா தனது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சம்பவத்தன்று காலை ஐஸ்வர்யாவின் பெற்றோர் நேரில் வந்து லிகித் சிம்ஹாவிடம் சமரசம் பேசிவிட்டுச் சென்றனர். பெற்றோர் கிளம்பிய சில மணி நேரங்களிலேயே மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லிகித் சிம்ஹா, ஐஸ்வர்யாவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். கணவர் வெளியில் சென்ற பிறகு, மனமுடைந்த ஐஸ்வர்யா தனது சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஐஸ்வர்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டியதாகப் பாகலகுண்டே போலீசார் வழக்குப் பதிவு செய்து லிகித் சிம்ஹாவைக் கைது செய்தனர். ஐஸ்வர்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகப் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளதால், போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனநல ஆலோசனைக்கான உதவி எண்கள்:
தற்கொலை எண்ணம் என்பது ஒரு நொடிப் பொழுதில் ஏற்படும் பாதிப்பு. இத்தகைய சூழலில் இருப்பவர்கள் தற்கொலை முடிவைத் தவிர்த்து, கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனை பெறலாம்:
சினேகா (தன்னார்வத் தொண்டு நிறுவனம்): 044-24640050 / 044-24640060
தமிழக அரசின் உதவி எண்: 104
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!