உருக்குலைந்த கார்... லாரியை முந்த முயன்றதில் விபரீதம் - 4 பேர் உடல்நசுங்கி பலி!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் நேற்று பிற்பகல் லாரியை முந்திச் செல்ல முயன்றதில் காரில் சென்ற 4 இளைஞர்கள் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு, உத்தரப் பிரதேசத்திற்கு தங்களது காரில் திரும்பிக் கொண்டிருந்த 4 இளைஞர்கள் பரிதாபமாக இந்த விபத்தில் உயிரிழந்தனர். கோட்டா மாவட்டம் செச்சாட் சந்திப்பு அருகே நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் கார் வந்துகொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற லாரியை அதிவேகமாக முந்திச் செல்ல முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் பின்புறத்தில் பலமாக மோதியது.
மோதலின் வேகத்தில் கார் முற்றிலுமாக சிதைந்து உருக்குலைந்தது. காரின் இடிபாடுகளுக்குள் இளைஞர்கள் சிக்கிக்கொண்டனர். நெடுஞ்சாலை ரோந்துப் படையினர் மற்றும் போலீசார் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவர்களை வெளியே எடுத்தனர்.
விபத்தில் சிக்கியவர்களை ராம்கஞ்ச் மண்டி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரஞ்சல் சதுர்வேதி (26) - கான்பூர் தேஹாட், அங்குஷ் துபே (25) - கான்பூர் தேஹாட், ஸ்ரேஸ்தா வாஜ்பாய் (21) - கான்பூர் தேஹாட், அன்ஷ் பிரதாப் சிங் (20) - கோண்டா என உயிரிழந்த நான்கு பேரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்: இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்துக்குள்ளான லாரியைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். லாரி ஓட்டுநர் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். விபத்து நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விபத்துக்கான சரியான காரணத்தைச் செச்சாட் போலீசார் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!