திருவண்ணாமலை பரணி, மகா தீபத்தை தரிசிக்க நாளை ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு - மலை ஏற அனுமதி மறுப்பு!
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரள உள்ள நிலையில், திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரணி மற்றும் மகா தீபம் தரிசிக்க, நாளை டிசம்பர் 1ம் தேதி காலை 10 மணி முதல் ஆன்லைன் மூலம் கட்டண அனுமதிச் சீட்டுகள் வெளியிடப்பட உள்ளன. அதே சமயம், பக்தர்களின் பாதுகாப்புக் கருதி, தீப மலை ஏற இந்த ஆண்டும் அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் உறுதியாகத் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 3ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன. இந்த முக்கிய நிகழ்வுகளைத் தரிசிக்க விரும்புவோர், நாளை (டிசம்பர் 1) காலை 10 மணி முதல் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற முகவரியில் பக்தர்கள் இந்த அனுமதிச் சீட்டுகளைப் பதிவு செய்யலாம்.
பரணி தீபம் மற்றும் மகா தீபத்திற்கான கட்டணம்:
1. பரணி தீபம் (டிசம்பர் 3, அதிகாலை): கட்டணம்: ரூ. 500. அனுமதி: 500 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
2. மகா தீபம் (டிசம்பர் 3, மாலை 6 மணி): கட்டணம் மற்றும் எண்ணிக்கை: ரூ. 600 கட்டணத்தில் 100 நபர்களுக்கும், ரூ. 500 கட்டணத்தில் 1,000 நபர்களுக்கும் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. கட்டண தரிசன அனுமதிச் சீட்டைப் பெற விரும்பும் பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டை, செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டணச் சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும். பதிவு செய்தவுடன், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் ஓ.டி.பி. எண் உங்கள் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும். கட்டணச் சீட்டைப் பதிவு செய்யப் பயன்படுத்திய அதே மின்னஞ்சல் முகவரி வழியாக டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பரணி தீபம் தரிசனம்: டிக்கெட் பெற்ற பக்தர்கள் டிசம்பர் 3ம் தேதி அதிகாலை 1.30 மணி முதல் 3 மணி வரை ராஜகோபுரம் திட்டிவாசல் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். மகா தீபம் தரிசனம் டிக்கெட் பெற்றவர்கள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ராஜகோபுரம் திட்டி வாசல் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குத் தாமதமாக வருவோருக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
தீபத் திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், புயல் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்புக் காரணங்களால் பக்தர்கள் மலை ஏற மீண்டும் ஒருமுறை தடை விதிக்கப்பட்டுள்ளது. 'டிட்வா' புயல் காரணமாகத் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியப் புவியியல் ஆய்வு மைய வல்லுநர் குழு சமீபத்தில் அளித்த அறிக்கையில், மலையேறும் பாதையானது உறுதித்தன்மை இல்லாமல் இருப்பதாகவும், ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட்ட மையப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் கற்பாறைகள் தளர்ந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
புயல் எச்சரிக்கை மற்றும் வல்லுநர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், பக்தர்களின் பாதுகாப்பு ஒன்றைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டும் பக்தர்கள் மலை ஏற மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கட்டணமில்லாத பொதுத் தரிசனத்துக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு: காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை ராஜகோபுரம் வழியாகப் பொதுத் தரிசனத்துக்கு அனுமதி. மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகு இரவு 7 மணி முதல் 8 மணி வரை ராஜகோபுரம் வழியாகப் பொதுத் தரிசனத்துக்கு அனுமதி.
தீபத் திருவிழா பற்றிய விபரங்களைத் தெரிந்து கொள்வதற்காகக் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண்கள்: 04175-233344 மற்றும் செல்போன் எண் 80727 97683 ஆகியவற்றைத் தொடர்புகொண்டு பக்தர்கள் தகவல்களைப் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!