இன்று ரதசப்தமி.. தீராத வினைகளைத் தீர்க்கும் சூரிய வழிபாடு - சிறப்புகளும், விரத முறைகளும்!
ஆரோக்கியம், செல்வம் மற்றும் நீடித்த ஆயுளைத் தரக்கூடிய சூரிய பகவான் பிறந்த தினமே 'ரதசப்தமி' என்று கொண்டாடப்படுகிறது. சூரிய ஒளியால் உலகம் உயிர் பெறுவது போல, ரதசப்தமி வழிபாட்டால் மனிதர்களின் வாழ்வு பிரகாசம் அடையும் என்பது நம்பிக்கை.
சூரியன் தனது பயண திசையை மாற்றிக் கொண்டு, ஏழாவது திதியான சப்தமி அன்று வடக்கு நோக்கித் திரும்புவதைக் குறிக்கும் வகையில் இது 'ரதசப்தமி' எனப்படுகிறது. சூரியன் பயணிக்கும் ரதத்தில் உள்ள ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களையும், ரதத்தின் 12 சக்கரங்கள் ஆண்டின் 12 மாதங்களையும் குறிக்கின்றன.
எருக்கன் இலை குளியல்: ஏன் முக்கியம்?
ரதசப்தமி தினமான இன்று சூரிய உதயத்தின் போது நீராடுவது மிகவும் விசேஷமானது. இன்று அதிகாலையில் தலையில் ஏழு எருக்கன் இலைகளை (பெண்கள் என்றால் அதனுடன் சிறிதளவு மஞ்சள்) வைத்துக் கொண்டு நீராடும் வழக்கம் உள்ளது.
அறிவியல் காரணம்:
எருக்கன் இலை சூரியனின் கதிர்களை ஈர்க்கும் தன்மை கொண்டது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, நரம்பு மண்டலத்தைச் சீராக்க உதவுகிறது.
ஆன்மிகக் காரணம்:
இந்த நீராடல் மூலம் முற்பிறவி பாவங்கள் மற்றும் ஏழ்மை நீங்கி, சூரியனின் அருளால் உடல் பொலிவு பெறும் என்பது ஐதீகம்.
வழிபாட்டு முறைகள்:
அதிகாலையில் நீராடி முடித்து, வீட்டு வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் கோலமிட்டு, சூரியனை நோக்கித் தொழுவது சிறப்பு. திறந்த வெளியில் (சூரிய ஒளி படும் இடத்தில்) மண் பானையில் பால் வைத்து, அது பொங்கி வரும் போது சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து சூரியனுக்கு நைவேத்தியம் படைக்க வேண்டும்.
சூரியனுக்குப் பிரியமான ஆதித்ய ஹ்ருதயம் அல்லது சூரிய அஷ்டகம் பாராயணம் செய்வது மிகுந்த பலனைத் தரும். ரதசப்தமி அன்று ஏழைகளுக்குக் கோதுமை அல்லது ஆடைகளைத் தானமாக வழங்குவது அஸ்வமேத யாகம் செய்த புண்ணியத்தைத் தரும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!