விஜய், டிசம்பர் 5ல் புதுச்சேரியில் மக்களை சந்தித்து பிரச்சாரம்!
தமிழகத்தில் மக்கள் சந்திப்புக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் டிசம்பர் 5ம் தேதி புதுச்சேரியில் மிகப் பிரமாண்டமான மக்கள் சந்திப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இதற்கான அனுமதியைக் கேட்டு, தவெக-வினர் புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி. ஷாலினி சிங்கிடம் அதிகாரப்பூர்வமாக மனு அளித்துள்ளனர். புதுச்சேரி காவல்துறையின் அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தவெக தலைவர் நடிகர் விஜய் தொடர்ந்து மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். ஆனால், கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்குப் பிறகு, விஜய் தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தற்காலிகமாகத் தொடராமல் இருந்தார்.
கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக, அதன் பிறகு தவெக சார்பில் 'மக்கள் பாதுகாப்புப் படை' என்ற தொண்டர் படை உருவாக்கப்பட்டு, அவர்களுக்குக் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது குறித்துப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சேலத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தவெக அனுமதி கேட்டது. ஆனால், கூட்ட நெரிசல் காரணமாக அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கிடைக்காத நிலையில், சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அரங்கில் கட்சி நிர்வாகிகளை மட்டும் QR கோடு மூலம் 2000 பேர் கலந்துகொள்ளும் வகையில் விஜய் சந்தித்துப் பேசினார். அந்தக் கூட்டத்தில்தான் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தும், பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டும் பேசியிருந்தார். மக்கள் சந்திப்புக்கு அனுமதி கிடைத்தவுடன் மீண்டும் வெளியே வந்து மக்களைச் சந்திப்பேன் என்றும் அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், வரும் டிசம்பர் 5ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கான அனுமதியைக் கேட்டு, புதுச்சேரி மாநில தவெக நிர்வாகிகள் டி.ஜி.பி. ஷாலினி சிங்கிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், தவெக தலைவர் விஜய் சாலை மார்க்கமாக காலாப்பட்டில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர்டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் வழியாக வந்து மக்களைச் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பின் போது, உப்பளம் சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகில் ஒலிப்பெருக்கி மூலம் உரையாற்றவும் அவர் திட்டமிட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த நிகழ்ச்சிக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கி, அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
புதுச்சேரி மக்கள் சந்திப்புக்குப் பிறகு, தொடர்ந்து தமிழகத்தின் கடலூருக்குச் செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. தமிழகத்தில் மக்கள் சந்திப்புக்கு அனுமதி கிடைக்காத நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் தவெக தலைவர் நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு அங்குள்ள போலீசார் அனுமதி அளிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!