தமிழக மீனவர்கள் 10 பேருக்கு தலா ரூ.5 கோடி அபராதம்... இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்ற தமிழக மீனவர்கள் 10 பேருக்கு தலா ரூ.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 7ம் தேதி விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த 10 மீனவர்களும் வழக்கு விசாரணைக்காக நீர்க்கொழும்பு அருகே உள்ள வெளிச்சுரா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணைக்குப் பின்னர் தமிழக மீனவர்கள் 10 பேருக்கும் தலா ரூ.5 கோடி அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை கட்டத்தவறினால் 18 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து 10 மீனவர்களும் வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கை பணம் தலா ரூ.5 கோடி அபராதம் என்பது, இந்திய ரூபாய் மதிப்பில் தலா ரூ.1 கோடியே 46 லட்சம் என்பதாகும். இவ்வளவு அதிகமான தொகையை பாம்பன் மீனவர்களுக்கு அபராதமாக இலங்கை கோர்ட்டு விதித்தது, அவர்களுடைய குடும்பத்தினருக்கு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கோர்ட்டு விதித்த அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும். சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை மீட்டுக்கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
