உஷார் மக்களே... புதையல் ஆசை காட்டி பெண்ணிடம் 18 சவரன் நகைகள் அபேஸ்!

 
புதையல்
 

தமிழகத்தில் தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் புதையல் ஆசை காட்டி பெண்ணிடம் 18 சவரன் தங்க நகைகளை அபேஸ் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த நிதி நிறுவன ஊழியரும் சிக்கினார்.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காந்தி தெருவைச் சேர்ந்தவர் முத்துசெல்வம் (32). இவர் ஆலங்குளம் மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் அப்பகுதி மக்களிடம் தன்னை சாமியார் என்றும், பரிகார பூஜைகள் செய்வதாகவும் கூறினார்.

இந்நிலையில் முத்துசெல்வம் அப்பகுதியைச் சேர்ந்த தனது உறவினரான செல்லத்தாயிடம், ‘‘உங்களது வீட்டில் புதையல் இருக்கிறது. அதனை எடுப்பதற்கு நகைகளை வைத்து பரிகார பூஜை செய்ய வேண்டும்’’ என்றார்.இதனை உண்மை என்று நம்பிய செல்லத்தாய் தனது வீட்டில் இருந்த 18 பவுன் நகைகளை முத்துசெல்வத்திடம் கொடுத்தார். அந்த நகைகளை சிறிய மண்பானைக்குள் வைத்து துணியால் கட்டி வைத்து பூஜை செய்த முத்துசெல்வம், பின்னர் அதனை செல்லத்தாயின் வீட்டு வாசலில் கட்டி தொங்க விட்டார். மேலும் அதனை 6 மாதங்களுக்கு பிறகு திறந்து பார்த்தால்தான் புதையல் கிடைக்கும் என்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துசெல்வத்தின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த செல்லத்தாய், வீட்டு வாசலில் தொங்கவிடப்பட்டு இருந்த மண்பானையை திறந்து பார்த்தார். அப்போது அதில் நகைகள் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து செல்லத்தாய் தனது வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் முத்துசெல்வத்திடம், நகைகளை திருப்பி தரவில்லையெனில் போலீசாரிடம் புகார் தெரிவிப்பதாக கூறினர்.

இதையடுத்து முத்துசெல்வம் நகைகளுக்கு பதிலாக முதற்கட்டமாக ரூ.1½ லட்சத்தை செல்லத்தாயிடம் திருப்பி கொடுத்தார். மீதி நகைகளுக்கான பணத்தையும் சில நாட்களில் தருவதாக கூறினார். ஆனால் நீண்ட நாட்களாகியும் முத்துசெல்வம் பணத்தையோ, நகைகளையோ தரவில்லை.

இதனால் ஏமாற்றமடைந்த செல்லத்தாய் ஆலங்குளம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசெல்வத்தை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், முத்துசெல்வம் பரிகாரபூஜை செய்வதாக வாங்கிய நகைகளை நைசாக அபேஸ் செய்து தனது நண்பரும், தனியார் நிதி நிறுவன ஊழியருமான சுரண்டை அருகே உள்ள ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வத்திடம் விற்றது தெரியவந்தது.

உடனே முத்துசெல்வம், மாரிசெல்வம் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.80,000 பணத்தை மீட்டனர். கைதான இருவரையும் ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!