ஒரே மாதத்தில் 3,924 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு... 47 நாடுகளில் வேகமெடுக்கும் வைரஸ் பரவல்!
கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து உலகம் இன்னொரு வைரஸ் பரவலுக்குள்ளாகி அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. உலகம் முழுவதுமாக 47 நாடுகளில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டுமே 3,924 பேர் குரங்கு அம்மை வைரஸ் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் 30 பேர் சிகிச்சைப் பலனளிக்காமல் பலியாகி உள்ளதாக உலகச் சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில், ஏராளமான நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோய்க்கான உலக சுகாதார அமைப்பின் சூழ்நிலை அறிக்கையின் மூலம், குரங்கு அம்மை வைரஸின் அனைத்து வகைகளும் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு பரவி வருவது உறுதியாகியுள்ளது.

இது குறித்து, வெளியிடப்பட்ட அறிக்கையில், “கடந்த ஜூலை மாதம், செனீகல், காங்கோ மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் முதல்முறையாக, குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில், செனீகல் நாட்டில் பதிவான குரங்கு அம்மையின் வகையைக் கண்டறியும் ஆய்வுகள் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, ஜூலையில், தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் நாடுகளில் குரங்கு அம்மை பரவல் அதிகரித்துள்ளது. ஆனால், ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்புகள் குறைந்துள்ளன.

இருப்பினும், 21 ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த 6 வாரங்களாக குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதில், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில், குரங்கு அம்மையின் கிளேட் IIb வகை வைரஸ் பரவலும், மத்திய ஆப்பிரிக்காவில் கிளேட் Ia, கிளேட் Ib என இருவகை வைரஸ் பரவலும் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் கிளேட் Ib வகை வைரஸ் பரவலும் கண்டறியப்பட்டுள்ளன.
சீனா, ஜெர்மனி, துருக்கி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் கடந்த ஜூன் மாதம் முதல் கிளேட் Ib வகை குரங்கு அம்மை வைரஸின் பரவல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
