தொடரும் சோகம்! 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

 
ஸ்ரீதேவி

தமிழகத்தில் இளம்பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. அரசும் இதைத் தடுக்க பெரியளவில் நடவடிக்கை ஏதும் எடுக்காதது அதிர்ச்சியளிக்கிறது. 

பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் என  அனைவருமே ஆரோக்கியமான முறையில் பங்களித்தால் மட்டுமே இந்த தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே பெரிய கவுண்டாபுரம் பூமரத்து காட்டு பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன் (40). 

கூலி தொழிலாளியான அறிவழகனுக்கு சியாமளா (36) என்கிற மனைவியும், ஸ்ரீதேவி (17), கோமதி(15) என்ற 2 மகள்களும் இருந்தனர். இவர்களில் மூத்த மகள் ஸ்ரீதேவி 8ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளாள். கோமதி 6ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருக்கிறாள்.

தற்கொலை

இந்நிலையில் கடந்த 19ம் தேதி ஸ்ரீதேவி காணாமல் போனதாக கூறி, காரிப்பட்டி காவல் நிலையத்தில் தந்தை அறிவழகன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகன் சம்பத் (22), ஸ்ரீதேவியை திருமணம் செய்வதாக அழைத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியை கடத்தியதாக சம்பத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுமி ஸ்ரீதேவிக்கு, வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஏற்பாடு செய்ய தொடங்கி உள்ளனர். ஆனால் தற்போது திருமணம் வேண்டாம் என்று ஸ்ரீதேவி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஸ்ரீதேவியின் தாயார் சியாமளா, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் வீட்டில் அரளி விதையை அரைத்து குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் அறிவழகன் உடனடியாக மனைவியை மின்னாம்பள்ளி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் அறிவழகனும், 2வது மகள் கோமதியும் இருந்துள்ளனர். வீட்டில் மூத்த மகள் ஸ்ரீதேவி மட்டும் தனியாக இருந்துள்ளாள்.

நேற்று காலை 7 மணியளவில் மருத்துவமனையில் இருந்து அறிவழகன் மட்டும் தனது வீட்டுக்கு சென்றார். அங்கு அவருடைய மகள் ஸ்ரீதேவி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிறுமி இறந்த தகவல் கிடைத்ததும், காரிப்பட்டி போலீசார் அறிவழகனின் வீட்டுக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். ஸ்ரீதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

தூக்கிட்டு தற்கொலை

அப்போது, மாரியம்மன் கோவில் அருகில் ஆம்புலன்ஸ் சென்ற போது, ஆம்புலன்ஸைப் பொதுமக்கள் சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். சிறுமி ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? அவரது சாவில் இருக்கும் மர்மம் தெரிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்வேதா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சிறுமி ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு நடவடிக்கை எடுப்பதாக அங்கு கூடியிருந்தவர்களிடம் உறுதி அளித்தார். 

இதைத்தொடர்ந்து 17வயது சிறுமி மர்மமான முறையில் இறந்ததாக கூறி காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குறிப்பாக சிறுமிக்கு கட்டாய திருமணம் நடக்க இருந்த நிலையில், திருமணத்துக்கு ஸ்ரீதேவி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் அவருடைய தாய் தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதையறிந்து  ஸ்ரீதேவி மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கட்டாய திருமணத்துக்கு மறுத்ததால் கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

From around the web