ஹீலியம் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி!! 21 பேர் படுகாயம்!!
திருச்சி தெப்பக்குளம் அருகே சென்னை சில்க்ஸ் துணிக்கடை முன்பு இருசக்கர வாகனத்தில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வைத்து உத்தர பிரதேசமத்தைச் சேர்ந்த அனார் சிங் என்பவர் பலூன் வியாபாரம் செய்துள்ளார். இந்த மாதம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி போன்ற பண்டிகை வருவதால், திருச்சி கடை வீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பண்டிகை கால விற்பனையின் போது மக்கள் கூட்டத்தில், குழந்தைகளை கவரரும் வகையில் ஆட்டோவில் வந்து அனார்சிங் பலூன் வியாபாரம் செய்துகொண்டு இருந்துள்ளார். ஹீலியம் கேஸ் சிலிண்டர் மூலம் பலூனை காற்றை நிரப்பி விற்பனை செய்து வந்துள்ளார். பலூனை ஊதுவதற்காக பயன்படுத்தப்படும் ஹீலியம் சிலிண்டரை ஆட்டோவில் வைத்துள்ளார். ஆட்டோவில் ஹீலியம் சிலிண்டரை ஏற்றிக்கொண்டிருக்கும் பொழுது ஹீலியம் சிலிண்டர் திடீரென வெடித்துள்ளது.
இந்த விபத்தில் சின்னதாராபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் (எ) மாட்டு ரவி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஆட்டோவை அருகே நிறுத்திவிட்டு வாடகை வாங்க சென்ற ஆட்டோ ஓட்டுநர் வரகனேரி பகுதியை சேர்ந்த மன்சூர் என்பவரின் ஆட்டோ முற்றிலுமாக சேதம் அடைந்தது. துணி வாங்க வந்த, கீழ அம்பிகாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் (17) என்ற பள்ளி மாணவன் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மேலும் சிங்காரத்தோப்பு தனியார் மருத்துவமனையில் ஏழு பெண்கள் மூன்று குழந்தைகள் ஐந்து ஆண்கள் உட்பட 15 நபர்களும், பாபு ரோடு தனியார் மருத்துவமனையில் பிரபாகரன் (36), மகேஷ் (21), சிவாஜி (28) உள்ளிட்ட மூவரும், அண்ணா சிலை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சில்வியா(23), பிரியா(22), கவியரசு(26), ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த அனார் சிங் (31) என்ற வட மாநில பலூன் வியாபாரியை தேடி வருகின்றனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், விபத்து ஏற்பட்ட இடத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பின்னர் விபத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து, விபத்து குறித்து கேட்டறிந்தார்.
சிலிண்டர் வெடித்த இடத்தில், தடயவியல் துறை ஏடிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் தடயங்களை சேகரித்தனர். அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பை ஏற்படுத்திய, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பலூன் வியாபாரி அனார்சிங் என்பவர் மீது கோட்டை போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!