சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை... அமைச்சர் சேகர்பாபு உறுதி! கோவிலில் பதற்றம்!
சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முன்னதாக சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில், கனகசபை மீதேறி யாரும் தரிசனம் செய்யக் கூடாது என்று ஆலயத்திற்குள் தீட்சிதர்கள் பதாகை வைத்தது சர்ச்சையைக் கிளம்பி இருந்தது. இதன் பொருட்டு தீட்சிதர்களுக்கும், பக்தர்களுக்கும் இடையேயான வாக்குவாதத்தின் போது, கனக சபையில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் நுழைந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
கடந்த ஜூன் 17ம் தேதி கொடியேற்றத்துடன் சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சன திருவிழா துவங்கியது. அந்த சமயம் 4 நாட்களுக்கு பக்தர்கள் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்று தீட்சிதர்கள் சார்பில் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது. இது குறித்து பக்தர்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏற அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நேற்று அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பக்தர்களை தரிசனம் செய்ய அழைத்துச் சென்ற காட்சி#Chidambaram | #ChidambaramTemple | #TNGovt | #tnpolice pic.twitter.com/CdazJGv0U8
— Nanda Kumaar (@nandajourno) June 28, 2023
பின்னர், போலீசார் உதவியுடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலயத்தில் இருந்த பதாகையை அகற்றச் சென்ற போது, தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், கடந்த 26ம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீட்சிதர்கள் வைத்த பதாகை அகற்றப்பட்டது.
பின்னர் பதாகையை அகற்றிய பிறகும் முரண்டு பிடித்த தீட்சிதர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கனகசபையில் ஏறி வழிபட அனுமதி மறுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழலில், அதிகாரிகள் கனகசபையின் பிரதான வழியே உள்ளே சென்றதால் பதற்றம் அதிகரித்தது. இதனால் தீட்சிதர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து கனக சபையில் ஏறிய 6 பேரும் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர்.
அதனை தொடர்ந்து கனக சபையில் அதிகாரிகள் நுழைந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு தீட்சிதர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கு பதிலடியாக தீட்சிதர்கள் தரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் சேகர்பாபு, சிதம்பரம் நடராஜர் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!