குற்றாலத்தில் குளிக்கத் தடை... விடுமுறை நாளில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
தொடர் விடுமுறை காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ள நிலையில், ஆர்ப்பரிக்கும் அருவியால் குளிக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளை ஏமாற்றமடைய செய்துள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பொதுவாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என வருடத்தில் 3 மாதங்கள் சீசன் காலம் ஆகும். சீசன் காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இந்த காலகட்டத்தில் குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பொழியும்.

இதமான தென்றல் காற்று தொடர்ந்து வீசும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது பெய்யும் சாரல் காரணமாக மரங்களும், தாவரங்களும் பசுமையாக காணப்படும். இந்நிலையில், தென்மேற்குப் பருவமழையையொட்டி தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

அருவிகளில் நேற்று தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று காலை 11.30 மணி நிலவரப்படி மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளான இன்று அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு இருப்பதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நீர்வரத்து குறைந்து வரும் பட்சத்தில் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
