திருச்செந்தூர் கோயிலில் பிரேக் தரிசன முறை... செப்.11க்குள் ஆட்சேபணைகள் தெரிவிக்கலாம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ரூ.500 கட்டணச் சீட்டில் விரைவு தரிசனம் முறை அமலுக்கு வர உள்ளது.
இதுகுறித்து இணை ஆணையர் /செயல் அலுவலர் ஞானசேகரன், தக்கார் இரா.அருள்முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை 2025-2026 மானியக் கோரிக்கை எண் 17 ல் அறிவிப்பு எண் 208-ல் பக்தர்கள் பெருவாரியாக வருகைபுரியும் திருக்கோயில்களில் தினசரி ஒரு மணி நேரம் இடைநிறுத்தம் தரிசன வசதி (Break Darshan) ஏற்படுத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மேற்படி சட்டமன்ற அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்வதற்கு தினசரி பிற்பகல் 03.00 மணி முதல் 04.00 மணி வரை கீழ்க்கண்ட விபரப்படியான திருவிழா மற்றும் விசேஷ நாட்களை தவிர்த்து பக்தர் ஒருவருக்கு ரூ.500 கட்டணச்சீட்டில் இடை நிறுத்த தரிசனம் நடைமுறைக்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இடைநிறுத்த தரிசனம் வழங்க இயலாத நாட்கள்
தைப்பூசம் - 5 நாட்கள்
மாசித்திருவிழா - 10 நாட்கள்
பங்குனி உத்திரம் - 3
சித்திரை வருடபிறப்பு - 1
வைகாசி விசாகம் - 5
ஆவணித் திருவிழா - 5
நவராத்திரி உற்சவம் - 5
கந்தசஷ்டி- 10 நாட்கள்
பௌர்ணமி நாட்கள் (ஒரு வருடத்திற்கு) - 24 நாட்கள்

மேற்படி நாட்களை தவிர நிர்வாக காரணங்களால் திருக்கோயில் நிர்வாகாத்தால் அறிவிக்கப்படும் இதர நாட்கள் இடைநிறுத்த தரிசனம் குறித்து ஆட்சேபணைகள் /ஆலோசனைகள் இருப்பின் எழுத்து பூர்வமாக இணை ஆணையர் / செயல் அலுவலர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் என்ற முகவரிக்கு எழுத்து மூலமாக 11.09.2025 மாலை 06.00 மணிக்குள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் கிடைக்கும்படி அனுப்பி வைக்கப்பட வேண்டும். 11.09.2025 தேதிக்கு பின்னர் பெறப்படும் ஆட்சேபணைகள் ஆலோசனைகள் ஏற்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
