கல்லூரி மாணவர்கள் பைக் சாகசம்... 14 பேர் மீது வழக்கு; ரூ.1.41 லட்சம் அபராதம் வசூல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு ரூ.1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று பொங்கல் விழா நடைபெற்றது. பொங்கல் விழாவில் பங்கேற்ற மாணவர்கள் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் விழா முடிந்ததும் மாணவர்கள் கல்லூரியின் முன்பாக சாலையில் மோட்டார் சைக்கிளில் வட்டமடித்து சாகசத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து விதிகளை மீறி, அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பொருத்திய மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்தனர்.

இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக மாறியது. இதன் காரணமாக அப்பகுதி வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் தலைமையில் சென்ற போலீசார், அங்கு மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களுக்கு மொத்தம் ரூ.1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதே போன்று நேற்று ஒரே நாளில் மட்டும் மாநகர பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 151 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3 லட்சம் 32 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். மேலும், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
