அதிர்ச்சி... பிரபல நடிகர் மாயம்... காவல் நிலையத்தில் தந்தை புகார்!
தனது மகனைக் கடந்த ஒரு வார காலமாக காணவில்லை என்று பிரபல நடிகர் குருசரண் சிங்கின் தந்தை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 'தாரக் மேத்தா கா ஊல்தா சாஷ்மா' மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்த நடிகர் குருசரண் சிங் கடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல் திடீரென மாயமாகி உள்ளார். பல இடங்களில் தேடியும் தனது மகனைக் காணாத நிலையில், குருசரண் சிங் தந்தை ஹர்கித் சிங் , இது குறித்து டெல்லியில் உள்ள பாலம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் கடத்தல் வழக்குப் பதிவு செய்து, நடிகர் குருசரண் சிங்கைத் தேடி வருகின்றனர்.50 வயதான குருசரண் சிங் கடந்த ஏப்ரல் 22ம் தேதி காலை 8.30 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட இருந்தார். ஆனால், அவர் மும்பைக்கு செல்லவில்லை என்று போலீசார் தங்கள் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். அவரது செல்போன் எண் ஏப்ரல் 24ம் தேதி வரை செயலில் இருந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது தந்தை, மகனைத் தேடும் விஷயத்தில் காவல்துறை அதிகாரிகள் தனக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் தேவையான ஆவணங்களை சேகரித்து, இதுகுறித்து விரைவான விசாரணை நடத்தப்படும் என்று அவர்கள் தங்களுக்கு உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.
என்ன நடந்தது என்பதை அறிய சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நடிகர் குருசரண் சிங் காணாமல் போனது டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!