கிருஷ்ண ஜெயந்தி வழிபடும் முறைகளும், பலன்களும்!
நாளை நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விஷ்ணு அவதாரங்களில் உற்சாகமான அவதாரமும், அநேக அற்புதங்கள் நிறைந்த அவதாரமும் கிருஷ்ண அவதாரம் தான். கிருஷ்ணனின் லீலைகளை கோபியர்கள் மட்டுமல்லாமல் கேட்பவர், பார்ப்பவர் எவர் மனதையும் கொள்ளை கொள்வார். கம்சனை வதம் செய்து சிசுபாலனையும், நரகாசூரனையும் வதம் செய்தார். கிருஷ்ணன் ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தவர். ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த தினத்தை ஸ்ரீ ஜெயந்தி, கோகுலாஷ்டமி எனக் கொண்டாடுவர்.

நள்ளிரவில் சிறையில் அவதரித்த கண்ணனின் பிறந்த தினம் கோகுலாஷ்டமியாக அனுசரிக்கிறோம். நாளை நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. கிருஷ்ணர் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர். கிருஷ்ணரை கண்ணா, முகுந்தா என பல பெயர்களில் அழைக்கிறோம். கண்ணை இமை காப்பது போல் கிருஷ்ணன் நம்மை காப்பான் என்பது ஆன்றோர் மொழி.
முகுந்தா என்றால் முக்தி அளிப்பவன் எனப் பொருள். கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமியின் சிறப்பு அம்சம். இன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும்.

வாசலில் தொடங்கி பூஜையறை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிப்பதை வழக்கமாக வைத்திருப்பர். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.
கண்ணனை அழைக்க வாசலில் இருந்து பூஜை அறை வரைக்கும் அரிசி மாவில் குட்டிக்குட்டி பாதங்கள் வரைய வேண்டும். வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை அரிசி மாவால் பதியச் செய்ய வேண்டும்.

கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. பிறகு கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணை, அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முறுக்கு, லட்டு இவைகளை நைவேத்தியமாக படைக்கலாம். கிருஷ்ணர் பிறந்தது நள்ளிரவு என்பதால் பூஜையை மாலையில் செய்வது கூடுதல் சிறப்பு குழந்தைகளுக்கு கண்ணன் ராதை வேடம் போட்டு அக்கம் , பக்கத்து சிறுவர் சிறுமிகளை பூஜைக்கு அழைத்து அவர்களுக்கு கண்ணனின் லீலைகளை சொல்லும் கதைகளை கூறினால் அவரின் அனுக்கிரகம் பெறலாம்.
கிருஷ்ண ஜெயந்தி நாளில் கண்ணனை வழிபட குட்டிக் கிருஷ்ணன் வீட்டில் பிறப்பான் என்பது ஐதிகம். மகிழ்ச்சி தங்கும், அகந்தை அகலும். இளைஞர்களுக்கு அரசியல் ஞானம் உண்டாகும், நிர்வாக திறன் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும், திருமணத் தடைகள் அகலும், செல்வம் பெருகும், வயல்களில் விளைச்சல் அதிகரிக்கும், ஆடு, மாடுகள் பல்கி பெருகும், கடன் தீரும், பகை ஒழியும், நண்பர்கள் கூட்டு தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். புகழ் கூடும், குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் அதிகரிக்கும். கண்ணணை வீட்டிற்கு அழைப்போம். இல்லங்களில் அமைதியையும், இன்பத்தையும் கொண்டு வருவோம்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
