மக்களவையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல்!
பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மத்திய அரசு, பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் மக்களவையில் ‘ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு மசோதா, 2025’ தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின்படி, பணம் வைத்து விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுகளை இயக்குவது அல்லது ஊக்குவிப்பது போன்ற செயல்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தடையை மீறி ஆன்லைன் பண விளையாட்டுகளை இயக்கும் நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்கள் அல்லது பிரச்சாரங்கள் செய்பவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆன்லைன் பந்தயம் குறித்த நிதி பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் நிதி பரிமாற்றம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் மீறுபவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் உயர்ந்த அபராதம் விதிக்கப்படும் என மசோதா இயற்றப்பட உள்ளது. இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டால், இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுத் துறையில் முதல் விரிவான தேசிய சட்டமாக அமையும் என கருதப்படுகிறது. மேலும் இதன் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் மனநலப் பிரச்சினைகள், மோசடி, பணமோசடி மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
