21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் மன்மோகன் சிங்கிற்கு இறுதிச்சடங்கு!
முன்னாள் இந்திய பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை இரவு காலமான நிலையில், மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் ராணுவ மரியாதையுடன் நடைபெற்று வருகிறது.
இன்று காலை டெல்லியில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட மன்மோகன் சிங்கின் உடல் காலை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், சித்தராமையா, டி.கே. சிவகுமார், பூபேஷ் பாகெல், சுக்விந்தர் சிங் உள்ளிட்டோர் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். மன்மோகன் சிங்கின் மனைவி மற்றும் மகளும் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து ஊர்வலமாக ராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட மன்மோகன் சிங் உடல், யமுனை நதிக்கரையில் நிகம்போத் காட் மயானத்தில் நண்பகல் 12 மணிக்கு வந்தடைந்தது. மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா். காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் இறுதிஅஞ்சலி செலுத்தினர்.
முழு ராணுவ மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்று வருகிறது. மன்மோகன் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடி அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!