இன்று மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் புறப்பாடு!

 
திருப்பரங்குன்றம்


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (திங்கட்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.  நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு 8-ம் கால யாக வேள்விகள் நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் இருந்து வந்துள்ள 150 சிவாச்சாரியர்கள் யாகசாலை பூஜை செய்து வருகின்றனர். 85 ஒதுவார்கள் மூலம் தமிழ் வேத பாராயணம் நடந்து வருகிறது. நாளை அதிகாலை 4.30 மணிக்கு   யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ராஜகோபுரத்திற்கு தங்கம், வெள்ளி கடம் புறப்பாடு நடக்கிறது. அங்கு அதிகாலை 5.25 மணிக்கு ராஜகோபுரத்தின் 7 கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கோலாகலமாக கும்பாபிஷேகம் நடக்கிறது.

திருப்பரங்குன்றம்

இதே போல கோவிலுக்குள் உள்ள கோவர்த்தனாம்பிகையின் விமானம், விநாயகரின் விமானம் மற்றும் பசுபதி ஈசுவரர் விமானத்திற்கு மேள தாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் முடிந்ததும் காலை 6.10 மணிக்கு   கோவிலின் கருவறையில் முருகப்பெருமானின் திருக்கரத்தில் மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. இந்நிகழ்வில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது .  

திருப்பரங்குன்றம் மலை
மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (திங்கட்கிழமை) கும்பாபிஷேகம் நடக்க இருப்பதை முன்னிட்டு மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கோவில் இருந்து புறப்பாடாகி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எழுந்தருளுவர்.  இன்று மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் கோவிலில் பூஜைகள் நடைபெற்று அன்று இரவு 10 மணிக்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி நள்ளிரவு திருப்பரங்குன்றம் கோவிலை சென்றடைவர். அங்கு நாளை கும்பாபிஷேக விழாவில் எழுந்தருளி மீண்டும் இரவு திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து புறப்பாடாகி நள்ளிரவு மதுரை மீனாட்சி, சுந்தரேசுவரர் கோவிலில் வந்து சேர்த்தியாவார்கள். எனவே நாளை முழுவதும் மீனாட்சி அம்மன் கோவில் நடைசாத்தப்பட்டிருக்கும். இன்று மாலை 6 மணி முதல் மறுநாள் 14ம் தேதி முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் பக்தர்களின் வசதிக்காக இன்று மாலை 6 மணி முதல் மற்றும் நாளை 14ம் தேதி முழுவதும் தற்போது வழக்கத்தில் உள்ளபடி கலைக்கூடத்திற்கும் (ஆயிரங்கால் மண்டபம்) மற்றும் அன்னதானத்திற்கும் அத்துடன் அன்றைய தினம் நடைபெறும் திருமணங்களுக்கு வன்னிமரத்தடி விநாயகர் கோவிலுக்கும் பக்தர்களை ஆடிவீதிகளில் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.  ஜூலை15ம் தேதி வழக்கம் போல் அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?