விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... பிள்ளையார்பட்டி மோதகம் செய்முறை!
கொழுக்கட்டை இல்லாமல் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவது எப்படி? கூடவே மோதகம் எப்படி சுவையாக செய்வது என தெரிஞ்சுக்கோங்க. விநாயகர் வழிபாட்டை பொறுத்தவரை கொழுக்கட்டை, மோதகம், லட்டு, அப்பம், அவல், பொரி, கடலை, சுண்டல் என விதவிதமான நைவேத்தியங்கள் வைக்கப்படும் என்றாலும் கூட மோதகத்திற்கு தான் எப்போதுமே முதலிடம்.

தேவையான பொருட்கள்:
பச்சரிசி- 1 கப்
பாசிப்பருப்பு - அரை கப்
தேங்காய் துருவல் - அரை கப்
வெல்லம் - 2 கப்
நெய்- தேவையான அளவு
ஏலக்காய் தூள் - சிறிதளவு

செய்முறை:
அரிசி மற்றும் பாசிப்பருப்பை கழுவி தனித்தனியாக உலர வைக்கவும். கடாயில் பச்சரியை லேசாக வறுக்கவும். அதே கடாயில் பாசிப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். இரண்டையும் மிக்சியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரிசியும், பருப்பும் சேர்த்து எத்தனை கப் வருகிறதோ? அதே அளவு வெல்லம் எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி லேசாக சூடாக்க வேண்டும். வெல்லம் நன்கு கரைந்த பின் இதை தனியாக வடிகட்டவும்.
இதையடுத்து அடி கனமுள்ள கடாயில் 4 கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் சிறிதளவு நெய், ஏலக்காய் தூள் சேர்க்கவும். தண்ணீர் கொதி வருவதற்கு முன்பே அரைத்து வைத்துள்ள அரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும். 3 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்.
பாதி வெந்ததும் இதனுடன் துருவிய தேங்காய் மற்றும் வடிகட்டி வைத்துள்ள வெல்லப்பாகு சேர்க்கவும். இதை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி சூடு குறைந்ததும், கையில் நெய் தடவி விட்டு உருண்டையாக பிடித்து வைக்கவும். தேவைப்பட்டால் அச்சுகளைப் பயன்படுத்தி பல்வேறு வடிவங்களில் செய்துகொள்ளலாம். இந்த மோதகத்தை ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைத்தால் சுவையான பிள்ளையார்பட்டி மோதகம் தயார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
