ஜல்லிக்கட்டு நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் போன்ற இடங்களிலும், சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை , புதுக்கோட்டைமாவட்டம் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை வருவதற்க்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி , மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகளில் கலந்து கொள்ளும் விலங்குகளுக்கு தேவையற்ற துன்பம் தரக் கூடாது, காளைகளுக்குத் தேவையற்ற வலி மற்றும் கொடுமைகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ள குழு நிகழ்ச்சியின் போது உடனிருந்து அறிக்கை அளிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் செயலாக்கப்பட வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளமான www.jallikattu.tn.gov.in இணையதளத்திற்கு சென்று விண்ணப்பம் செய்துகொள்ளலாம்.
அதே நேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் முழு வீடியோவும் பதிவு செய்யப்படவேண்டும். இந்த ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த தகவல்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என முதன்மைச் செயலாளர் சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!