உஷார்.. மழை நீரில் வழிந்தோடும் மணல் குவியல்கள்... சேறாகும் நெடுஞ்சாலைகள்..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் தாலுகாவில் நேற்று முதல் தற்போது வரை தொடர் மழை பெய்து வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி 77.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது. இந்நிலையில், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் அருகே விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான நான்கு வழிச்சாலை பணிக்காக மணல் குவியல்கள் ஆங்காங்கே குறிப்பிட்ட இடைவெளியில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மணல் குவியல்கள் தொடர் மழை காரணமாக, கரைந்து நெடுஞ்சாலைகளில் சேறாக தேங்கியுள்ளன. அதன்படி சிதம்பரத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் மண் குவியல்கள் சரிந்து மழையில் கரைந்து வழிந்தோடி வருகிறது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை வரதராஜன் உறவினர்களுடன் காரைக்காலில் இருந்து புதுச்சேரியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருக்கடையூர் அருகே சாலையில் வழிந்தோடிய மணலில் சிக்கி அவரது கார் விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்களுக்கு எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை. இருப்பினும் காரின் முன் பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்து மணல் சேறில் சிக்கிக் கொண்டது. தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தரங்கம்பாடி தீயணைப்பு துறையினர் மணல் குவியலில் சிக்கியிருந்த காரை அரை மணி நேரத்திற்கும் மேல் போராடி மீட்டனர். மேலும் சாலை முழுவதும் மணல் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் சாலையில் சிக்கிக் கொள்கின்றன. அத்துடன் உடனடியாக சாலையில் உள்ள மணலை அகற்றி சீரமைக்க வேண்டும் எனவும், மண்சரிவு மேலும் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!