சிறப்பு எஸ்ஐ வெட்டிக்கொலை... நிவாரண நிதியை ரூ.1 கோடியாக உயர்த்தி முதல்வர் உத்தரவு!

 
எஸ்.ஐ.வெட்டிக்கொலை

திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பு எஸ்.ஐ.வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில் நிவாரண நிதியாக ரூ.30 லட்சம் அறிவித்திருந்த முதல்வர் ஸ்டாலின், நிவாரண நிதியை ரூ.1 கோடியாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்  மகேந்திரனுக்கு சொந்தமாக குடிமங்கலம் மூங்கில்தொழுவு பகுதியில் தோட்டம் உள்ளது. தென்னை மரங்கள் அதிகமுள்ள இந்த தோட்டத்தில் பராமரிக்கும் வேலைக்காக மூர்த்தியின் குடும்பத்தினர் அங்கேயே தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தந்தை, மகன் இடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில் இது குறித்து பக்கத்துத் தோட்டத்தில் இருந்தவர்கள் அவசர காவல் உதவி எண் 100 க்கு தகவல் தெரிவித்தனர்.

அப்போது ரோந்துப் பணியில் இருந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் அங்கு சென்றுள்ளார். போதையில் இருந்த தந்தை, மகன் இருவரும் சண்டையை விலக்கச் சென்ற சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.  

தந்தை, மகன் சண்டையை பிரித்து ஆம்புலன்சில் அனுப்பி வைக்க சண்முகவேல் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. ஆத்திரத்தில் எஸ்.ஐ. சண்முகவேலை வெட்டிக் கொலை செய்த  நிலையில், மற்றொரு காவலரையும் வெட்ட முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வெட்டிக்கொலை

தலைமறைவான தந்தை மூர்த்தி, மகன்கள் தங்கப்பாண்டியன் மற்றும் மணிகண்டனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் போலீசார் விரைந்து சென்று, சண்முகவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் வாகன ஓட்டுநருக்கும் சிறிதாக காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தனது தோட்டத்தில் சமீபத்தில் பணிக்குச் சேர்ந்துள்ளனர். இருவரும் யாரென்றே தனக்குத் தெரியாது என சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின்  உயிரிழந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணிப்புரிந்து வந்த சண்முகவேல் (வயது 57) மற்றும் ஆயுதப்படைக் காவலர் திரு.அழகுராஜா ஆகிய இருவரும் நேற்று (05.08.2025) இரவு 11 மணிக்கு  ரோந்துப் பணியின் போது சிக்கனூத்து அருகில் தனியரின் தோட்டத்து சாலையில் நடந்த அடிதடி பிரச்சனை குறித்து தகவல் அறித்ததும் விசாரணை நடத்த சென்ற போது  அடிதடி பிரச்சனையில் ஈடுபட்டிருந்த மூவர் சிறப்பு எஸ்.ஐ. மற்றும் ஆயுதப்படை காவலர் ஆகிய இருவரையும் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டியதில் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்சியும், வேதனையும் அடைந்தேன். 

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். சண்முகவேலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன்   அவரது குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது நிவாரண நிதியை ரூ.1 கோடியாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?