2 கோடி உறுப்பினர்கள் இலக்கு... மீண்டும் மக்களை நேரில் சந்திக்கத் தயாராகும் தவெக!

நடிகர் விஜய். 2024ல் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கி கொள்கை - கோட்பாடுகளையும் அவர் வெளியிட்டார். தொடர்ந்து, அரசியலில் வேகம் காட்டி வரும் விஜய், சட்டமன்ற தேர்தலை சந்திப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டினை பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே வெற்றிகரமாக நடத்தி காட்டினார். அந்த மாநாட்டில், அரசியல் எதிரி, கொள்கை எதிரி பற்றி பேசிய விஜய், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்குதரப்படும் என அழைப்பு விடுத்தார்.
தமிழக அரசியலில் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக மாறி மாறி ஆட்சி செய்து வரும் தி.மு.க. - அ.தி.மு.க., தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு எப்போதும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தந்ததில்லை என்ற நிலையே இருக்கிறது. விஜய்யின் இந்த புதிய அறிவிப்பு, இரு கட்சிகளின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களை யோசிக்க வைத்தது. இது தி.மு.க. - அ.தி.மு.க. தலைமைக்கும் கிலியை ஏற்படுத்தியது .தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழகத்திற்கு பல்வேறு நிலைகளில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை பணியும் தொடங்கியது. தற்போதைய நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் 1½ கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் பெரிய கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வில் கூட உறுப்பினர்களின் எண்ணிக்கை இதே நிலையில்தான் உள்ளதாக தெரிகிறது. ஆளுங்கட்சியான தி.மு.க., தங்கள் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி. வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து உறுப்பினர் சேர்க்கும் பணியில் அக்கட்சியினர் ஈடுபட உள்ளனர். அடுத்த வாரத்தில் இருந்து மீண்டும் உறுப்பினர் சேர்க்கை பணியை தீவிரப்படுத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டு உள்ளார்.
இதற்காக குழு அமைத்து ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று மக்களிடம் த.வெ.க. கொள்கைகளை எடுத்து கூற விஜய் அறிவுறுத்தி இருக்கிறார். உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக கட்சி தலைமைக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. 'வாட்ஸ் அப்' குழுக்கள் மூலம் தொடர் கட்சி பணிகளை முன்னெடுக்கவும் உரிய அறிவுறுத்தல்களை கட்சி தலைமை வழங்கி உள்ளது.
இதற்கிடையே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், ஏதாவது காரணத்திற்காக வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என நிர்வாகிகளை விஜய் கேட்டுக்கொண்டு உள்ளார். பூத் கமிட்டி கூட்டங்களை விரைந்து நடத்துவது குறித்த ஆலோசனை விரைவில் நடத்த விஜய் முடிவு செய்துள்ளார். அடுத்த மாதம் (ஆகஸ்டு) கட்சியின் 2-வது மாநாட்டினை நடத்துவது என்றும், செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது.
மேடையில் விஜய் பேசும் போது, மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடனும், மாநிலத்தில் ஆளும் தி.மு.க.வுடனும் கூட்டணி இல்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்தார். மேலும், சுயநல அரசியல் லாபங்களுக்காக பா.ஜ.க.வுடன் கூடிக்குலாவி கூட்டணிக்கு செல்ல நாங்கள் தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ இல்லை என்று அ.தி.மு.க.வையும் நேரடியாக தாக்கிப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!