தறிகெட்டு உயரும் தக்காளி விலை... விரைவில் கிலோ ரூ.200ஐ தொடும் அபாயம்!
தமிழகத்தில் சென்னை தொடங்கி, தென்மாவட்டங்கள் வரை தக்காளியின் விலை, குடும்பத்தலைவிகளை நித்தமும் கண்ணீர் சிந்த வைத்துக்கொண்டிருக்கிறது. சென்னையில் கோயம்பேடு சந்தையில் கிலோ 90 ரூபாய்க்கும், பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கும் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. தென்மாவட்டங்களில் தக்காளி நிலைமை சொல்லிக் கொள்ளும்படியில்லை. நேற்று காலை வரை ஒரு கிலோ தக்காளி 120 முதல் 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தக்காளி வரத்து இதற்கு காரணமாக சொல்லப்பட்டது அதனால் சந்தைகளுக்கும் குறைவாகவே வரத்து இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தைவிட வட மாநிலங்களில் தக்காளி விலையின் நிலைமை மோசமாக உள்ளது. டில்லியின் ஆசாத்பூர் மொத்த விற்பனை சந்தையில் நேற்று தக்காளி கிலோ 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில், சில்லறை விற்பனை விலையில், ஒரு கிலோ தக்காளி கிலோ 170 முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். சில்லறை விற்பனையில் தக்காளி விலை கிலோ 200 ரூபாய்வரை எட்டும் என்று வியாபாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தக்காளி விலையுடன் இஞ்சி விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடந்தமாதம் கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இஞ்சி, இப்போது கிலோ 320 ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இஞ்சி அதிகம் சாகுபடி செய்யப்படும் கர்நாடகாவில், பருவம் தப்பிய மழையால் இஞ்சி வரத்து பெரும் அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடகா வரத்து இல்லாவிட்டாலும், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து இஞ்சி வரத்து தொடங்கி, விலை உயர்வை கட்டுப்படுத்தும் என்றனர். ஆனால், மணிப்பூரில் தொடரும் வன்முறைகளால், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து இஞ்சிவரத்து தடைபட்டுள்ளது என்றும் கவலைத் தெரிவித்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!