ரயில்வே கேட் மூடப்படாதது தான் விபத்துக்கு காரணம்... ரயில்வே துறை விளக்கம்!
கடலூர் மாவட்டத்தில் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதியது. இந்த கோர விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர், மேலும் சில மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தின்போது, ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை (45) என்பவர் மீது மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில், அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

இது குறித்த முதற்கட்ட விசாரணையில், ரயில்வே கேட் மூடப்படாதது தான் விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. கேட் கீப்பர் கவனக்குறைவாக இருந்ததாகவும், ரயில் வருவதை அறிந்தும் கேட்டை மூடவில்லை எனவும் கூறப்படுகிறது. பள்ளி வேன் ஓட்டுநர், கேட்டை மூட வேண்டாம் என கேட் கீப்பரிடம் கூறி, அவசரமாக கடக்க முயற்சித்ததாகவும் தெரிகிறது. இது குறித்து, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன், திருச்சி ரயில்வே எஸ்.பி. ராஜன் மற்றும் சென்னை ரயில்வே பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

“கேட் கீப்பரின் அலட்சியத்தால் இந்த கோர விபத்து நேர்ந்தது,” என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். “ரயில்வே கேட்டை மூடாமல், கேட் கீப்பர் தூங்கிவிட்டார். இதனால் வேன் கடந்து சென்றபோது விபத்து ஏற்பட்டது,” என விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். மேலும், ஆளில்லா ரயில்வே கேட் பகுதிகளில் பாதுகாப்பு வசதிகள் இல்லாதது மற்றும் கேட் கீப்பர்களின் கவனக்குறைவு இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மின்கம்பி அறுந்து விழுந்ததற்கு மின்சார வாரியத்தின் பராமரிப்பு குறைபாடு காரணமாக இருக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.
ரயில்வே தரப்பில், “பள்ளி வேன் ஓட்டுநர்தான் ரயில்வே கேட்டை மூட வேண்டாம் என கேட் கீப்பரிடம் கூறி, கடந்து செல்ல முயன்றார்,” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. “ரயில் வருவதை அறிந்து கேட் கீப்பர் கேட்டை மூட முயற்சித்தபோது, வேன் ஓட்டுநர் அவசரமாக கடந்து செல்லும் வரை மூட வேண்டாம் என கூறினார். வேன் முழுமையாக கடக்க முடியாத நிலையில், விழுப்புரம்-மயிலாடுதுறை ரயில் மோதியது,” என ரயில்வே தரப்பு தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
