இதுவரை எந்த அரசும் செய்யாத சாதனை... தமிழர்களுக்கு உலக அரங்கில் அங்கீகாரம் பெற்றுத் தந்த பிரதமர் மோடி!
தமிழுக்கும் தமிழர்களுக்கும் உலக அரங்கில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு, இதுவரையில் எந்த அரசும் செய்யாத வகையில் ஒரு புதிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது. தமிழை தேசத்தின் அடையாளமாக முன்னிறுத்தி, பல்வேறு திட்டங்களையும் முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது பாராட்டுக்களை பெற்றுள்ளது.
பிரதமர் மோடி எப்போதுமே எந்தவொரு முக்கியமான மேடையாக இருந்தாலும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் தமிழை உலகின் பழமையான மொழிகளில் ஒன்று என்றும் தமிழர்களின் நாகரிகத்தையும் தொடர்ந்து புகழ்ந்து வருகிறார்.

ஐ.நா. சபை, ஜி20 உச்சி மாநாடுகள் மற்றும் பிற வெளிநாட்டு மேடைகளிலும் திருவள்ளுவர் உட்பட தமிழ் கவிஞர்களின் மேற்கோள்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். முதன்முறையாக இந்திய அரசின் ஆதரவுடன் பிஜி போன்ற நாடுகளில் தமிழ் கற்பிக்கும் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது கடந்த 80 ஆண்டுகளில் எந்த அரசும் இதுவரையில் செய்யாத சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் கலாச்சார மற்றும் பாரம்பரியப் பிணைப்பை வலுப்படுத்தும் வகையில் காசி - தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமங்கள் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் பங்கேற்றனர். இத்தகைய நிகழ்வுகள் வட இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே ஒரு வலுவான கலாச்சாரப் பாலத்தை உருவாக்கியுள்ளன.

மருத்துவக் கல்வியைத் தமிழில் வழங்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும், பல்வேறு மத்திய அரசுத் தேர்வுகள் முதன்முறையாக தமிழில் எழுதும் உரிமை வழங்கப்பட்டது. இது தமிழ் மாணவர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
செங்கோல், நடராஜர், தமிழ்ப் புனிதங்கள்: புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் சைவ ஆதீனங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய சின்னமான 'செங்கோல்' தேசிய மரியாதையுடன் நிறுவப்பட்டது. ஜி20 மாநாட்டில் பிரமாண்டமான நடராஜர் சிலை நிறுவப்பட்டு, ஆண்டவனின், "ஆனந்த தாண்டவம்" உலக அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டது. மோடி அரசு தமிழர்களின் கலாச்சாரம், வீரம் மற்றும் பாரம்பரிய சின்னங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.

கடல் கடந்து ஆட்சி செய்த ராஜேந்திர சோழனுக்கோ, அவரது தந்தை ராஜராஜ சோழனுக்கோ உரிய முக்கியத்துவத்தை இதுவரை மத்திய, மாநில அரசுகள் செய்தது இல்லை. ஆனால் பிரதமர் மோடி சோழர்களின் பெருமைகளை பல மேடைகளில் தொடர்ந்து பேசி வந்துள்ளார். உச்சமாக கங்கைகொண்ட சோழபுரம் சென்ற பிரதமர் மோடி, ஆடித் திருவாதிரை நிகழ்வில் பங்கேற்றதோடு, ராஜேந்திர சோழனுக்கு நினைவு நாணயம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ராஜராஜ சோழன் மற்றும் அவரது மகன் ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலைகளை தமிழகத்தில் அமைப்பேன் என வாக்கு கொடுத்துள்ளார்.
மின்சக்தி, ஸ்மார்ட் சிட்டி, ரயில்வே மேம்பாட்டுத் திட்டங்கள்: தமிழகத்தில், மத்திய அரசின் சார்பில், 11 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல திட்டங்கள் தொடர்கின்றன. 77 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. பல வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடி துறைமுகம் நவீனமயமாக்கப்பட்டு, ரூ.4,800 கோடிக்கும் அதிகமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தேசிய கல்விக் கொள்கை (NEP), மும்மொழிக் கொள்கை போன்ற முக்கியமான மத்திய அரசின் திட்டங்களை திமுக அரசு எதிர்ப்பதால், தமிழ்நாட்டுப் பெண்கள் உள்ளிட்ட பலர் பயன்பெறும் திட்டங்கள் தடைபடுகின்றன. வாரிசு அரசியல், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசு செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாதது போன்ற விமர்சனங்கள் தமிழக அரசு மீது முன்வைக்கப்படுகின்றன.
திருவள்ளுவர், அகத்தியர் போன்ற தமிழ் இலக்கியப் பெருமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்குப் பதிலாக, திமுக குடும்ப அரசியல் மற்றும் வம்சாவளிப் பெருமைகளை மட்டுமே முன்னிறுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ராஜேந்திர சோழனுக்கு சிலை வைக்க முயற்சி எடுக்காத திமுக, கருணாநிதிக்கு பேனா சிலை வைக்க கடலுக்குள் இடம் தேடுவது சரியா என சமூக வலைத்தளங்களில் கேள்விகள் வந்தபடி உள்ளன.
மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு, தமிழ்நாட்டின் தேவைகளுக்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்த திமுக தவறி விட்டது. பள்ளிக் கல்வித் தரக் குறைவு, மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் வழங்குவதற்கான அடிப்படை ஒருங்கிணைப்புக் குறைவு போன்ற பிரச்சினைகள் உள்ளன என்ற விமர்சனங்களையும் திமுக அரசு எதிர்கொள்கிறது.

மோடி அரசு தமிழின் பெருமை, வீரர்களின் பங்களிப்பு, பாரம்பரியம், அரசியல் மற்றும் கல்வி மேம்பாடு எனப் பன்முகத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. உலக அரங்கில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது. இதற்கு மாறாக, திமுக அரசு தமிழ் வரலாறு சார்ந்த வீரர்களையும், பாரம்பரியச் சின்னங்களையும் ஒதுக்கி, மக்கள் மத்தியில் அவர்களது சாதனைகளை மறக்கடிக்க முயற்சி செய்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
எல்லா ஜாதியினரும் சோழர்கள் எங்கள் ஜாதிக்காரர்கள் என்று சொல்லும் அளவுக்கு ஜாதி பாகுபாடு இல்லாமல் திருமண உறவு வைத்தவர்கள் சோழர்கள். ஆனால் ஏன் அவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை ஏன் தரவில்லை திமுக அரசு என்ற கேள்விகளை, மோடி அரசின் தமிழ் முன்னோடிகளை பெருமைப்படுத்தும் நிகழ்வுகள் எழுப்ப வழி செய்து கொடுத்துள்ளது. தமிழும் தமிழனும் ஒரு தேசத்தின் அடையாளம் என்பதை உலகிற்கு உணர்த்திய மோடி அரசு போல இதற்கு முன்பு எந்த அரசும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
