சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த இளைஞர் திடீர் மாயம்! விமான நிலையத்தில் பரபரப்பு!
சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக விமானத்தில் சென்னை வந்த, கடலூர் மாவட்ட இளைஞர் சென்னை விமான நிலையத்தில் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 நாட்களுக்கு மேலாகியும் இளைஞர் குறித்து எந்தத் தகவலும் இல்லாததால் இளைஞரின் தந்தை சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கிலி (57). விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மகன் பெரியசாமி (21). பத்தாம் வகுப்பு வரை பெரியசாமி படித்துள்ளார். அதன்பின்பு குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு படிக்காமல் வேலை தேடத் தொடங்கினார். அவ்வப்போது இரண்டு முறை வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று விட்டு ஓரிரு மாதங்களில் வேலை பிடிக்கவில்லை என்று திரும்பி வந்து விட்டார்.

இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெரியசாமி சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஹெல்பர் வேலைக்கு சென்றார். அங்கும் வேலை பிடிக்காமல் இந்தியா திரும்ப முடிவு செய்தார். அந்த தனியார் நிறுவனம் பெரிய சாமியை இந்த மாதம் 10ம் தேதி விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்து விட்டது.
ஆனால் பெரியசாமி வேலையை விட்டுவிட்டு இந்தியாவிற்கு திரும்பி வந்தது திட்டக்குடி அருகே கிராமத்தில் உள்ள அவருடைய பெற்றோருக்கு தெரியாது. பெரியசாமி சிங்கப்பூரில் வேலையில் இருப்பதாக நினைத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக பெரியசாமியிடம் இருந்து போன் எதுவும் வராததால், சங்கிலி தனது மகன் பெரியசாமிக்கு செல்போனில் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. தொடர்ந்து செல்போன் சுவிட்ச் ஆஃப் என்று இருந்ததால் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டார்.
பெரியசாமி இம்மாதம் 10ம் தேதி சிங்கப்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக இலங்கை வழியாக சென்னைக்கு புறப்பட்டு வந்து விட்டார் என்று தெரிவித்தனர். ஆனால் பெரியசாமி வீட்டிற்கு வரவில்லை. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் என்று இருந்ததால் மகனைத் தேடி சங்கிலி நேற்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.

சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் இது குறித்து சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த தனது 21 வயது மகன் காணவில்லை என்று புகார் செய்தார். அதன் பேரில் விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இம்மாதம் 10ம் தேதி சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக சென்னை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் பெயர் பட்டியலை ஆய்வு செய்தனர். அந்த விமானத்தில் பெரியசாமி சென்னைக்கு வந்து குடியுரிமை சுங்கச் சோதனை அனைத்தையும் முடித்து விட்டு விமான நிலையத்தில் இருந்து வெளியில் சென்றுள்ளது தெரிய வந்தது. அதோடு இம்மாதம் 10ம் தேதி சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் அதில் தெளிவாக எதுவும் இல்லை.
இதை அடுத்து சென்னை விமான நிலைய போலீசார் சங்கிலி புகாரின் பெயரில் சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் சென்னை வந்த கடலூர் மாவட்ட இளைஞர் பெரியசாமி மாயமாக மறைந்தது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். பெரியசாமி வெளிநாட்டு வேலை என்று சில முறை வெளிநாடுகளுக்கு சென்று விட்டு, உடனுக்குடன் திரும்பி வந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக வீட்டிற்கு செல்லாமல் வேறு எங்காவது சென்று விட்டாரா? இல்லையேல் யாராவது கடத்தி விட்டனரா? இல்லை காதல் விவகாரம் ஏதாவது உண்டா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக சென்னை திரும்பி வந்த, கடலூர் மாவட்ட இளைஞர் சென்னை விமான நிலையத்தில் இருந்து மாயமாக மறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
