பொதுமக்கள் பெரும் குழப்பம்... வாக்கு சதவீதத்தை குறைத்து அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்.!
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று முதல்கட்ட தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி இந்தியா முழுவதும் 21 மாநிலங்கள், 102 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. குறிப்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகளில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.தமிழகத்தில் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 950 பேர்.
தமிழகம் முழுவதும் 68,320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி, இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியிருந்தனர். சில பகுதிகளில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்ததாக கூறப்படுகிறது.
மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். சுமுகமாக வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு, தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகி இருந்ததாகக் கூறினார்.
இதனைத்தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளது என அறிவித்தது. இதில் அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 81.48% வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 54.27% வாக்குகளும் பதிவாகியுள்ளது.
இதனால் வாக்கு சதவீதத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் நேற்று மக்களவை தேர்தலில் பதிவான மொத்த வாக்கு சதவீதமும், தொகுதி வாரியாக அறிவிக்கப்பட்ட வாக்கு சதவீதத்திலும் பெரும் வேறுபாடு இருப்பதால் பொதுமக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது என அறிவித்திருந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளது என 3% குறைத்து அறிவித்துள்ளது. இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விளக்கத்தை இன்று தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!