ஜடேஜா சூழலில் சிக்கி சிதறிய தென் ஆப்பிரிக்கா... இந்தியாவுக்கு கம்பீரமான 8வது வெற்றி!

இந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், தோல்வியையே காணாத அணியாக இந்தியா வெற்றிநடைப் போட்டு வருகிறது. உ லகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள், நேற்றைய தென் ஆப்பிரிக்கா இந்தியா அணிகளுக்கு இடையேயான போட்டியை பெரிதும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால், ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமான எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டாமல், அடுத்தடுத்து 10 விக்கெட்டுகளையும் 83 ரன்களுக்குள் இழந்தது தென்னாப்பிரிக்கா. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 243 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற 37-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் ரோகித் சர்மா 24 பந்துகளில் 40 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய விராட் கோலி, ஸ்ரேயாஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்தனர். சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் 87 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, களமிறங்கிய கே.எல்.ராகுல் 8 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து விராட் கோலியுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். சூர்யகுமார் யாதவ் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஜடேஜா களம் இறங்கினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் கோலி 101 ரன்னும், ஸ்ரேயாஸ் 77 ரன்னும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் மகாராஜ், ரபாடா, என்கிடி தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து 327 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக், பவுமா ஆகியோர் களம் இறங்கினர். இதில் டி காக் 5 ரன்னிலும், பவுமா 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களம் இறங்கிய வான் டர் டுசென் 13 ரன், மார்க்ரம் 9 ரன், க்ளாசென் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்.
இதையடுத்து டேவிட் மில்லர் மற்றும் மார்கோ யான்சென் ஜோடி சேர்ந்தனர். இதில் மில்லர் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 83 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 243 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். குல்தீப், ஷமி தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!