பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை... பெண் உட்பட 10 பேர் கைது!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் பெண் உட்பட 10 பேர் கொண்ட கும்பலைப் போலீசார் கைது செய்தனர். போலீசார் கொள்ளை கும்பலைக் கைது செய்ய முற்பட்ட போது, போலீசாரிடம் இருந்து தப்பியோடிய போது கீழே விழுந்த 3 பேரின் கை எலும்பு முறிந்தது.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு புண்ணியவாளன்புரம் பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு வள்ளியூரை சேர்ந்த முருகன் என்பவர் மேற்பார்வையாளராக உள்ளார். வழக்கமாக அவர் பெட்ரோல் பங்கில் வசூலாகும் பணத்தை இஸ்ரோ மையம் அருகில் உள்ள வங்கியில் செலுத்துவது வழக்கம். அதன்படி, சுமார் ரூ.36 லட்சத்தை கடந்த 5-ந் தேதி அன்று வங்கியில் செலுத்துவதற்காக ஒரு பையில் போட்டு மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் திடீரென்று முருகனை வழிமறித்து தாக்கி அவர் வைத்திருந்த ரூ.36 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து பணகுடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த சின்ன சரவணன் (வயது 24), முனீஸ்வரன், செல்வன் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கல்யாண் என்பதும், மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த வேட்டையில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ராம் கணேஷ், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த செல்வகுமார், நாங்குநேரி தென்னிமலை பகுதியைச் சேர்ந்த கண்ணன் (19), ஈரோடு பகுதியை சேர்ந்த காவிரி என்ற பெண் உள்பட 6 பேரையும் நேற்று முன்தினம் பிடித்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இதில் ராம் கணேஷ், செல்வகுமார், கண்ணன் ஆகிய 3 பேரும் போலீசில் தப்பி ஓட முயன்றபோது தவறி கீழே விழுந்ததில் கை எலும்பில் முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கைது செய்யப்பட்ட 10 பேரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூ.28 லட்சம் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!