நீடிக்கும் பதற்றம்... தொடரும் வன்முறை... மணிப்பூரில் 2 போலீசார் படுகாயம்!
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சேர்ந்த தலைவர் கனன் சிங் மற்றும் நால்வரை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 2 காவலர் படுகாயம் அடைந்தனர்.அரம்பாய் தெங்கோலைச் சேர்ந்த தலைவர்களின் ஒருவரான கனன் சிங்கை இம்பால் விமான நிலையத்தில் இருந்து கைது செய்திருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இம்பால் பள்ளத்தாக்கின் பல மாவட்டங்களில் தடை உத்தரவுகளை மீறி போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மோதல்போக்கு உருவாகி வருகிறது. திங்கட்கிழமை இரவு இம்பால் கிழக்கு மாவட்டத்தின் குராய் லாம்லாம் பகுதியில் மோதல்கள் வெடித்துள்ளன. கூட்டத்தைக் கலைக்கப் பாதுகாப்புப் படையினர் பல முறை கண்ணீர்ப் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களால் சுட்டனர்.மேலும் போராட்டக்காரர்கள் 4 சக்கர வாகனம் ஒன்றும் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தௌபல், காக்சிங் மாவட்டங்களிலும் சாலைத் தடுப்புகள் மற்றும் டயர்களை எரித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இம்பால் மேற்கு மாவட்டத்தின் தேரா பகுதியிலும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பதற்றம் நிலவி வருகிறது. விஷ்ணுபூர் மாவட்டத்தின் நம்போலில், போராட்டக்காரர்களுடனான மோதலின்போது குறைந்தது 2 காவல்துறையினருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. பதற்றத்திற்கு மத்தியில், இன்று காலை இம்பாலில் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வருகின்றனர். மணிப்பூரில் 2023, மே மாதம் மைதேயி-குகி சமூகங்களிடையே மோதல் நீடித்து வருகிறது. இதில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
