திருச்சியில் 3 பேர் வயிற்றுப் போக்கால் உயிரிழக்கவில்லை... அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!

 
கே.என்.நேரு

திருச்சியில் 3 பேர் வயிற்றுப் போக்கால் உயிரிழந்ததாக பரபரப்பான நிலையில், எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தை பேசி வந்த நிலையில், 3 பேர் வயிற்றுப் போக்கால் உயிரிழக்கவில்லை என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசுகையில், “திருச்சி மாநகராட்சி, 5-வது மண்டலம், 10-வது வார்டு, உறையூர் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்துள்ளது. அதை உபயோகித்த 4 வயது குழந்தை உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக பொதுமக்கள் புகார் கொடுத்தும், இதை சரி செய்யாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவ கட்டணத்தை அரசே வழங்க வேண்டும்” என்றார். இதை ஆதரித்து பல்வேறு கட்சி எம்எல்ஏக்கள் பேசினர்.

எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்து பேசுகையில், “திருச்சி மாநகராட்சி, உறையூர் மின்னப்பன் தெரு, பணிக்கன் தெரு பகுதிகளில் கடந்த 18-ம் தேதி மாலை 7 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் உடனடியாக மாநகராட்சி மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவற்றின் மூலம் 1,492 வீடுகளில் வசிக்கும் 6400 பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை மற்றும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பகுதியைச் சேர்ந்த 42 பேர் திருச்சி அரசு மருத்துவமனையிலும், 11 பேர் தனியார் மருத்துவமனையிலும் என 53 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் 9 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மூலம் 11 ஆயிரத்து 875 பேருக்கு முன்னெச்சரிக்கையாக குளோரின் மாத்திரைகள் மற்றும் ஓஆர்எஸ் பாக்கெட்கள் உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை மூலம் 6 இடங்களில் குடிநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு, திருச்சி மண்டல நீர் பகுப்பாய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கு தீவிர தொற்று நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்கள் சுதந்திரமாக இயங்க வழிவகை செய்வது, காவல் துறையை கையில் வைத்துள்ள முதல்வரின் கடமை.- எடப்பாடி பழனிச்சாமி

பிரியங்கா என்ற 4 வயது குழந்தையை பிரேத பரிசோதனை செய்ததில், அவர் வயிற்றுப்போக்கால் உயிரிழந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. மூதாட்டி லட்சுமி 10 நாட்களாக உடல் நலம் குன்றி இருந்ததால் அவர் 19-ம் தேதி உயிரிழந்தார். லதா என்பவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு 18-ம் தேதி நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்தியதால் 3 பேர் உயிரிழந்தனர் என்று பத்திரிகையில் வந்த செய்தி தவறானது.

கழிவுநீர் கலக்க வாய்ப்பில்லை: இப்பகுதியின் அருகில் வெக்காளியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்றபோது வழங்கப்பட்ட உணவு, குளிர்பானங்கள், நீர் மோர் போன்றவற்றை அருந்தியதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்க கூடும். குடிநீரில் கழிவுநீர் கலக்க வாய்ப்பே இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டு, டேங்கர் லாரிகள் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

திருவிழாவில் கொடுக்கப்பட்ட குளிர்பானத்தின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதை யார் வழங்கினார் என கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு ஏற்படவில்லை” என்று கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web