6 கரடிகள் சுற்றி வளைப்பு.. போராடி கணவனை காப்பாற்றிய இளம்பெண் - ஒடிசாவில் நெகிழ்ச்சி!
ஒடிசா மாநிலம் கரன்ஜியா பகுதியில் உள்ள மிலு கிராமத்தைச் சேர்ந்த மால்டே சோரன் மற்றும் அவரது மனைவி லிலி சோரன் ஆகிய இருவரும், அருகில் உள்ள வனப்பகுதிக்கு இலைகள் சேகரிக்கச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் எதிர்பாராத விதமாக ஒரு பயங்கரமான சூழலில் சிக்கிக்கொண்டனர். அடர்ந்த காட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென ஆறு கரடிகள் கொண்ட கூட்டம் இவர்களைச் சூழ்ந்துகொண்டது. நிலைகுலைந்து போன அந்த தம்பதியினரை நோக்கிக் கரடிகள் உறுமியபடி நெருங்கின. அதில் ஒரு கரடி ஆக்ரோஷமாக மால்டே சோரன் மீது பாய்ந்து, அவரைக் கடித்துக் குதறத் தொடங்கியது.

கணவன் உயிருக்குப் போராடுவதைக் கண்டு லிலி சோரன் அஞ்சி ஓடவில்லை. தன் கணவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், தான் இலைகளை வெட்ட வைத்திருந்த கோடரியை எடுத்து அந்தக் கரடியுடன் நேருக்கு நேர் மோதினார். லிலி சோரனின் ஆவேசமான தாக்குதலை எதிர்பார்க்காத அந்தக் கரடி, காயமடைந்த மால்டே சோரனை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் ஓடியது. இதைக் கண்டு மற்ற கரடிகளும் அங்கிருந்து கலைந்து சென்றன. பலத்த காயமடைந்த மால்டே சோரனை மீட்ட லிலி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். தற்போது அவர் கியோன்ஜார் மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒடிசாவில் ஏற்கனவே யானைக் கூட்டம் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது கரடிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது மலைக்கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கணவனைக் காப்பாற்றிய லிலி சோரனின் துணிச்சலை அந்த ஊர் மக்கள் பாராட்டி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
