65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று... 10 மாவட்டங்களில் 'மிக கனமழை'.. தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்!
வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் வலுப்பெற்று நகர்வதால், தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய பரவலான மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, வரும் நாட்களில் சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு (Very Heavy Rain) வாய்ப்பு இருப்பதாகவும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, தற்போது வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நிகோபார் தீவுகளில் இருந்து சுமார் 870 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, அது நாளை மறுநாள் (நவ.27) மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.
இந்த இரு வானிலை அமைப்புகளின் காரணமாகத் தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (நவ.26) மற்றும் நாளை (நவ.27) தென் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆனால், வரும் நவம்பர் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் தமிழகத்தின் பெரும்பாலான கடலோரப் பகுதிகளில் மழை கொட்டித் தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிக கனமழைக்கான எச்சரிக்கை (Very Heavy Rain Alert):
இன்று (நவ.26): கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நவம்பர் 27: தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 28: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.
நவம்பர் 29: புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மேலும், நவம்பர் 27 முதல் 29 ஆம் தேதி வரை காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வரையிலும், இடையிடையே 65 கி.மீ வரையிலும் அதிகரிக்கும். எனவே, மீனவர்கள் இந்தக் கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கண்டிப்பாக எச்சரித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, இன்று (நவ.26) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
