மின் அட்டை ஆதார் இணைப்பு கட்டாயம்!! அதிரடி!!

 
மின் இணைப்பு ஆதார்

தமிழகத்தில்  மின்சாரம் பயன்பாடு 2 மாதத்திற்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. மின்சார கட்டணங்களை மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே  என எதன் மூலமாக வேண்டுமானாலும் செலுத்திக் கொள்ளலாம். தற்போது தமிழக மின்வாரியத்துறை   மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என  அறிவுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில்   மின் நுகர்வோர்  மின் கட்டணம் செலுத்தும் போது ஆதார் அட்டையின் நகலை எடுத்து சென்று இணைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை அந்த வீட்டு மின் இணைப்புடன் இணைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மின் இணைப்பு ஆதார்

தமிழகம் முழுவதும் 3 கோடி மின் இணைப்புக்கள் உள்ள நிலையில்  இதுவரை சுமார் 3 லட்சம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்து உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.  பல்வேறு காரணங்களினால் பலர் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க முன்வருவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட மின்வாரியம் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் என அதிரடியாக அறிவித்துள்ளது.   ஆன்லைனில் கட்டுபவர்களுக்கும் ஆதாரை இணைக்கும் பக்கத்துக்கு தானாகவே சென்று ஆதார் எண்ணை பதிவிட அறிவுறுத்துகிறது.  தேவையான விவரங்களை பதிவு செய்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த இயலும்.  கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளை நடத்தி வரும் நிறுவனங்கள் மூலம் மின் கட்டணத்தை செலுத்த முயற்சி மேற்கொள்பவர்களுக்கும் இதே நடைமுறைதான்.  

மின் கட்டணம் செலுத்த நிர்ணயிக்கப்பட்டுள்ள கடைசி நாளில் இணையதளம் மூலம் கட்டணத்தை செலுத்த முயன்ற பலர் ஆதார் எண்ணை இணைக்காததால் கட்டணத்தை செலுத்த முடியாத நிலைக்கு தற்போது. தள்ளப்பட்டுள்ளனர்.  ஆதார் எண்ணை இணைத்த சிலருக்கு மீண்டும் ஆதார் எண்ணை இணைக்கும்படி அதே பக்கத்திற்கு தான் செல்கிறது. மேலும் சிலருக்கு ஆதார் இன்னும் பதியப்படவில்லை எனவும் பதில் வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. 'இணையதளம் மூலம் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஆதார் எண்ணை அதிகாரிகள் சரிபார்த்து ஒப்புதல் அளித்த பின்பே இணைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த சிக்கல் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மின்வாரிய அலுவலகத்தை பொறுத்தவரை நேரடியாக ஆதாரை இணைக்கும் போது உடனடியாக இணைப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டு அதன்மூலம் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும்போது மின் இணைப்பு துண்டிப்பு  என்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.  இதனால்  மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க உரிய கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும், ஆதாரை இணைத்தால்தான் மின் கட்டணமே செலுத்த முடியும் என்ற கெடுபிடியை தளர்த்த வேண்டும் என்பது தான் தற்போதைய பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

ஆதார் எண்ணை இணைக்கும் முறை: 

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு www.tangedco.gov.in செல்ல வேண்டும்.  அல்லது https://adhar.tnebltd.org/adharupload/ என்ற இணையதள பக்கத்திற்கோ செல்ல வேண்டும்.  மின் இணைப்பு எண்,  மொபைல் எண்ணை பதிவிட வேண்டும்.மொபைல் எண்ணுக்கு ஓ.டி.பி. வரும். அதனை பதிவிட வேண்டும். அடுத்த பக்கத்தில் உரிமையாளரின் பெயர் தகவல்கள்  கேட்கப்படும். இணைக்கப் போகும் ஆதார் எண் உரிமையாளரா அல்லது வாடகைதாரரா என கேட்கப்படும்.

மின் இணைப்பு ஆதார்

சரியான தகவலை அளித்து, ஆதார் எண்ணை இடைவெளி இல்லாமல் பதிவு செய்ய வேண்டும்.  ஆதார் எண்ணில் இருக்கும் பெயரை பதிவிட வேண்டும். இதன்பிறகு 300 'கே.பி.' அளவுள்ள புகைப்படத்தை பதிவேற்றம் செய்யலாம். கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என சான்றளித்து 'சப்மிட்' செய்து விட வேண்டும்.  ஆதார் எண் சமர்ப்பிக்கப்பட்டது. விரைவில் இணைப்பு உறுதி செய்யப்படும் என்ற பதில் அளிக்கும்.  இத்துடன்  ஆதாரை இணைக்கும் பணி முடிவடைந்து விடும்.  வாடகை வீட்டில் குடியிருப்போர் மின் இணைப்புடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web