4 வயது சிறுவன் நெல்லிக்காய் பறிக்க சென்ற போது கிணற்றில் விழுந்து பலி!

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் வசித்து வருபவர் சண்முகம். இவரது மகன் 4 வயது கதிர் செல்வம். இவரது உறவினர்களது குழந்தைகளான மணிமாரி, ஜோதி கருப்பசாமி ஆகிய சிறுவர்களுடன் விளையாடுவதற்காக கதிர் செல்வமும் அருகே உள்ள சாஸ்தா கோவில் பகுதிக்கு சென்றிருந்தார். அங்கு, வயல்வெளியில் நெல்லிக்காய் கிடப்பதாக கூறி மூன்று பேரும் அதை பறிப்பதற்காக சென்றனர். நெல்லிக்காய் பறிக்கச் சென்ற போது அதன் அருகே தண்ணீர் இருந்த கிணற்றுக்குள் திடீரென கதிர் செல்வம் விழுந்துவிட்டார்.
இதனால் பதறிப்போன, உடன் வந்த இரண்டு சிறுவர்களும் அருகில் உள்ள வயலில் அறுவடை இயந்திரம் ஓட்டி வந்த டிரைவரிடம் நடந்த விபரத்தை கூறியுள்ளனர். அவரும் வேகமாக வந்து கிணற்றில் விழுந்த கதிர் செல்வத்தை காப்பாற்ற முயற்சித்துள்ளார். அதற்குள் கதிர் செல்வம் இறந்து கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்துங்கநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதிர் செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாடச் சென்ற 4 வயது சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!