“அப்பா என்றால் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும்...குடிக்க வைக்க கூடாது” - சீமான் ஆவேசம்!

அப்பான்னா பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். குடிக்க வைக்க கூடாது என்று நாம் தமிழர் கட்சி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வியெழுப்புகையில் ஆவேசமாக பேசியுள்ளார்.
கேள்வி:- அப்பா என்று அழைக்கிறார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லி உள்ளாரே?
சீமான்: அப்பா என்றால், இப்படி பண்ணிட்டீங்களே அப்பா என்று சொல்லி இருப்பார்கள். அவரையும், அவரது கட்சிக்காரர்களையும் தவிர வேறு யாராவது ஒருவரை நல்லாட்சி நடக்கிறது என்று சொல்ல சொல்லுங்கள். பள்ளிக்கரணை ஏரியை ஆக்கிரமித்து அரசு குப்பை மேடாக்கி உள்ளது. நல்லாட்சி என்று சொல்பவர்களுக்கு மனசாட்சி இருக்கிறதா? அப்பா என்ற சொல்லுக்கு மாண்பு உள்ளது. எல்லா பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும், நன்றாக குடிக்க வைக்க கூடாது.
கேள்வி:- தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்குவோம் என்று மத்திய அரசு கூறி உள்ளதே?
சீமான்: மத்திய திட்டத்தை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்குவோம் என்று சொல்வது எப்படி ஜனநாயகம் ஆகும். உங்கள் காசை கேட்கவில்லை. மாநிலங்களின் நிதி வருவாயின் பெருக்கம்தான் இந்திய ஒன்றிய அரசின் நிதி. இந்திய அரசுக்கு என்று வருவாய் பெருக்கத்திற்கு ஏதாவது வழி உள்ளதா? மாநிலங்கள் தரும் வரி வருவாயின் பெருக்கம்தான் நிதி வளமை. இதை செய்தால்தான் நிதி தருவோம் என்று சொல்வது கொடுங்கோன்மை. இந்தி கட்டாயமாக கற்க வேண்டும் என்ற அவசியம் ஏன்? நாட்டில் உள்ள ஏழ்மை, வறுமை, பசி, பட்டினி, வேலை இன்மை எல்லாத்திற்கும் ஒரே மருந்து இந்தி கற்பதுதானா?, இந்தியை ஏன் வலிந்து திணிக்கிறீர்கள். கல்வியை பொதுப்பட்டியலுக்கு சென்றதால்தான் இந்த பிரச்சனை. மாநில பட்டியலுக்கு கல்வியை மாற்ற வேண்டும்.
கேள்வி:- நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கையிலேயே மும்மொழிக் கொள்கை உள்ளதாக அண்ணாமலை விமர்சித்து உள்ளாரே?
சீமான்: பைத்தியக்காரத்தனம். அண்ணமலை ஐபிஎஸ் படித்தது போதாது எங்கள் வரைவு அறிக்கையை நன்றாக படிக்க வேண்டும். அதில் கொள்கை மொழி தமிழ், பயன்பாட்டு மொழி ஆங்கிலம் என்று போட்டு உள்ளோம். உலகின் எல்லா மொழிகளும் விருப்ப மொழி இந்தி உட்பட என்று போட்டு உள்ளோம். முதலில் அவர் தமிழனாக இருந்து பேச வேண்டும். இந்தி எனக்கு எதற்காக தேவை. வடஇந்தியாவில் பணி செய்ய சென்றால் இந்தியை தேவை கருதி கற்றுக் கொள்ளப்போகிறோம். இந்தி படி என்று சொல்லும் அண்ணாமலை, தமிழ் படிக்க பள்ளிக் கூடம் வைக்கவில்லையே. என்னை கேள்வி கேட்கும் அண்ணாமலையின் பிள்ளைகள் எங்கு படிக்கிறது. இங்கு பள்ளிக் கூடம் சுடுகாடாகத்தான் உள்ளது. சீமான் மகன் எங்கு படித்தால் உனக்கு என்ன? இந்தி தெரிந்தால்தான் இந்த நாட்டில் வாழ முடியும் என்று சொல்வதை ஏற்க முடியாது” என்று கூறினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!