உஷார்... மாப்பிள்ளை பார்ப்பது போல் நடித்து 8 சவரன் நகை திருட்டு... 4 இளம்பெண்கள் கைது!
கன்னியாகுமரி குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த 55 வயதுடைய ஒருவர் எல்.ஐ.சி. முகவராக உள்ளார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இவர்களது விவாகரத்து வழக்கு நாகர்கோவில் குடும்ப நல கோர்ட்டில் நடந்து வருகிறது.

தற்போது எல்.ஐ.சி. முகவரின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். அவரை கவனிக்க வேண்டும் என்பதற்காக எல்.ஐ.சி. முகவர் 2வது திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்காக ஆன்லைனில் திருமண வரன் தேடும் இணையதளத்தில் பதிவு செய்தார். இதை பார்த்து மதுரை சேர்ந்த முருகேஸ்வரி (30)என்ற பெண் எல்.ஐ.சி. முகவரை தொடர்பு கொண்டு அவரை திருமணம் செய்ய விரும்புவதாக கூறினார்.
மேலும் தனது குடும்பத்தினருடன் நேரில் பார்க்க வர உள்ளதாக கூறினார். அதற்கு எல்.ஐ.சி. முகவரும் சம்மதம் தெரிவிக்க, தனது முகவரி உள்ளிட்ட இதர விவரங்களை தெரிவித்துள்ளார். இதையடுத்து முருகேஸ்வரி, அவரது தங்கை கார்த்திகையாயினி (28)மற்றும் முத்துலட்சுமி (45), போதும் பொண்ணு (43) ஆகிய 4 பேரும் எல்.ஐ.சி. முகவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு எல்.ஐ.சி. முகவருடன் உறவினர்கள் இருந்தனர். அப்போது 2வது திருமணம் செய்ய சம்மதித்தால், அந்த பெண்ணுக்கு கொடுக்க இருக்கும் தங்க வளையல்கள், மோதிரம் என 8 பவுன் நகைகளை எல்.ஐ.சி. முகவர் காண்பித்தார். இதனை மாப்பிள்ளை பார்க்க வந்த பெண்கள் உன்னிப்பாக கவனித்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த நகைகளை அங்கிருந்த மேஜை டிராயரில் வைத்து விட்டு வந்தவர்களை உபசரிப்பதில் எல்.ஐ.சி. முகவர் தீவிரமாக இருந்தார். மாப்பிள்ளை பார்க்க வந்த 4 பெண்களும் காலையில் இருந்து இரவு 9 மணி வரை அங்கேயே இருந்து விட்டு சென்றனர். ஆனால் மறுநாள் எல்.ஐ.சி. முகவர் மேஜையில் வைத்திருந்த நகைகளைப் பார்த்தபோது அவற்றை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது மகன் மற்றும் மகளிடம் தெரிவித்தார்.
ஒருவேளை மாப்பிள்ளை பார்க்க வந்த பெண்கள் திருடியிருப்பார்களோ என்ற சந்தேகம் எல்.ஐ.சி. முகவருக்கு ஏற்பட்டது. உடனே அவர் முருகேஸ்வரியின் செல்போனை தொடர்பு கொண்ட போது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பிறகு முருகேஸ்வரியுடன் வந்த மற்றொரு பெண்ணுக்கு போன் செய்து கேட்டபோது, உங்களை அவளுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவள் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்றார். அத்துடன் மாயமான நகைகள் குறித்து கேட்ட போது சரியான பதில் கூறவில்லை.
இது குறித்து உடனடியாக எல்.ஐ.சி. முகவர் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரையை சேர்ந்த 4 பெண்களையும் பிடித்து விசாரித்த போது அவர்கள் நகைகளை திருடி சென்றதை ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து முருகேஸ்வரி, கார்த்திகையாயினி, முத்துலட்சுமி, போதும் பொண்ணு ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது வேறு ஏதேனும் திருட்டு வழக்குகள் உள்ளனா? எனவும் விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் அனைவரும் திருமணம் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாப்பிள்ளை பார்க்க வந்ததை போல் நடித்து நகைகளை பெண்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
