டெல்லியில் காற்று மாசு உச்சம்... இன்று முதல் டீசல் வாகனங்கள், கட்டுமானப் பணிகளுக்கு முழுத் தடை!
புதுடெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து, அபாயகரமான நிலையை எட்டியுள்ளதால், மத்திய அரசின் காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் 4-ஆம் தரநிலைக் கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக, அத்தியாவசியத் தேவைகளுக்கான வாகனங்களைத் தவிர்த்து, டீசல் வாகனங்கள் டெல்லிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கட்டுமான மற்றும் இடிப்புப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் புதுடெல்லியில் காற்றின் தரக்குறியீடு (AQI) 349 ஆக இருந்த நிலையில், நேற்று (டிசம்பர் 13) அது மேலும் அதிகரித்து 440-ஐத் தாண்டியது. காற்றின் தரக்குறியீடு 401-ஐத் தாண்டிவிட்டால், அது 4-ம் தரநிலை அபாயமாகக் கருதப்படுகிறது. இதையடுத்து, டெல்லி அரசு இந்தக் கடுமையான கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தியுள்ளது.

காற்று மாசுவைக் கட்டுப்படுத்த 4-ஆம் தரநிலையில் விதிக்கப்பட்டுள்ள முக்கியக் கட்டுப்பாடுகள்: அத்தியாவசியத் தேவைகளுக்கான வாகனங்களைத் தவிர்த்து, அனைத்து நடுத்தர மற்றும் கனரகச் சரக்கு டீசல் வாகனங்களும் புதுடெல்லிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மண் அள்ளுதல், தரையைத் தோண்டுதல், கட்டுமானங்கள் மற்றும் கட்டுமானங்களை இடித்தல் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டுமானப் பணிகளும் தடை செய்யப்பட்டுள்ளன. செங்கல் தொழில், சூடான கலவை ஆலைகள், சுரங்க நடவடிக்கைகள், நிலக்கரி மற்றும் உலை எண்ணெய் பயன்பாட்டுத் தொழில்களுக்குத் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அத்தியாவசியத் தேவையைத் தவிர்த்து, டீசல் ஜெனரேட்டரை பயன்படுத்தக் கூடாது. திறந்த வெளியில் எதையும் எரிக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாசுபாட்டைக் குறைக்க மக்கள் பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வலியுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும், தனியார் வாகனங்களில் சி.என்.ஜி., மின்சாரம் மற்றும் பி.எஸ்.-6 ரக கார்களை இயக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஊழியர்களில் பாதியளவினர் வீட்டிலிருந்தே படிக்கவும், பணிபுரியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
