உஷார்... ‘ஸ்லிம்’ இடுப்பழகு பெற அறுவை சிகிச்சை... 9 விரல்களை இழந்த இளம்பெண்!

இடுப்பு பகுதியில் இருக்கும் கெட்டக் கொழுப்புகளை அகற்றி, சிக்கென இடுப்பழகைப் பெறும் ஆசையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்திருந்தார் இளம்பெண் ஒருவர். பரிதாபமாக அறுவை சிகிச்சைக்குத் தயாரான இளம்பெண் 9 விரல்களை இழந்துள்ளார். இது குறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மீது புகாரளித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் நீது (31). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்த நிலையில், தனது வயிற்று பகுதியில் இருந்த கெட்ட கொழுப்புகளை நீக்குவதற்காக திருவனந்தபுரம் கஜக்கூட்டம் பகுதியில் உள்ள தனியார் அழகுசாதன மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்காக மருத்துவமனையில் நீதுவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சை முடிந்து மறுநாள் வீடு திரும்பினார். வீட்டிற்கு சென்றதும் நீதுவுக்கு வாந்தி-மயக்கம் என பல உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அவருக்கு ரத்த அழுத்தமும் மிகவும் குறைந்தது. இதையடுத்து நீதுவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையை, அவரது கணவர் பத்மஜித் தொடர்பு கொண்டு பேசினார்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மருத்துவர்கள் யாரும் இல்லை என்றும், எனவே மறுநாள் வருமாறு மருத்துவமனை தரப்பில் கூறியிருக்கின்றனர். ஆனால் நீதுவின் உடல்நிலை மிகவும் மோசமாகிய படியே இருந்தது. இதனால் நீதுவை அவரது கணவர் வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நீதுவின் உடலில் ரத்தஓட்டம் சீராக இல்லாமல் போனதால் இடது காலில் 5 விரல்கள் மற்றும் வலது கையில் 3 விரல்களை துண்டிக்கும் நிலை ஏற்பட்டது. அந்த விரல்களை அகற்றாவிடில் நீதுவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால், அவரது கையில் 3 விரல்களும், காலில் 5 விரல்களும் வெட்டி அகற்றப்பட்டன.
கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சை தவறாக செய்ததன் காரணமாகவே தனது மனைவி 9 விரல்களை இழந்து விட்டதாக நீதுவின் கணவர் பத்மஜித் குற்றம் சாட்டினார். நீதுவுக்கு கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சை செய்த தனியார் அழகுசாதன மருத்துவமனையின் மீது போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அந்த மருத்துவமனையின் உரிமையாளரான டாக்டர் பிபிலாஷ் மீது வழக்கு பதிந்தனர். மேலும் அவரது மருத்துமனை உடனடியாக மூடப்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!