இன்று மாலை 8 மணி வரையில் அனைத்து வாக்காளர் சிறப்பு உதவி மையங்களும் செயல்படும்!

 
வாக்காளர் பட்டியல்

இன்று சனிக்கிழமை நவம்பர் 29, 2025  சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும்  வாக்காளர் சிறப்பு உதவி மையங்கள் (Electors Special Help Desk) செயல்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் – 2026 பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்தப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில், இன்று அனைத்து சிறப்பு உதவி மையங்களும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officers - BLOs) ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று, வாக்காளர்களிடம் கணக்கீட்டுப் படிவங்களை (Enumeration Forms) வழங்கி, அதனைப் பூர்த்தி செய்தபின் மீண்டும் பெற்று வருகின்றனர். இந்தப் பணி தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது.

வாக்காளர் பட்டியல்

வாக்காளர்கள் இந்தப் படிவங்களைப் பூர்த்தி செய்வதில் ஏற்படும் சந்தேகங்களுக்குத் தீர்வு காணும் வகையிலும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் பெயர்கள் 2005ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களைக் கண்டறிய உதவும் வகையிலும், கடந்த நவம்பர் 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை எட்டு நாட்களுக்கு, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து (947) வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டன. இதன் மூலம் பெரும்பாலான கணக்கீட்டுப் படிவங்கள் பெறப்பட்டன.

பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களைப் பெறுவதற்கான காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், இந்தப் பணியை மேலும் துரிதப்படுத்த, சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் – 2026ன் பணிகளின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து 947 வாக்குச்சாவடி மையங்களிலும், அத்துடன் அதிகமான வாக்காளர்கள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பன்முக வளாகக் குடியிருப்புப் பகுதிகளிலும் இன்று வாக்காளர் சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

வாக்காளர் சரிபார்ப்பு தேர்தல் சார் SIR

இந்த சிறப்பு மையங்கள் இன்று (நவம்பர் 29, 2025) காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரையிலும் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவத்தை அளிக்காத வாக்காளர்கள் அனைவரும், இந்தச் சிறப்பு உதவி மையங்களைப் பயன்படுத்தித் தங்களது படிவங்களை விரைந்து வழங்கி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்தத் தகவலை சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு. ஜெ. குமரகுருபரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!