உஷார்... பஞ்சு மிட்டாய்க்கு மேலும் ஓராண்டு தடை... புற்றுநோய் அபாயம் காரணமாக அதிரடி!
புதுச்சேரி மாநிலத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு புதுச்சேரி கடற்கரை மற்றும் பூங்காக்களில் விற்கப்பட்ட பஞ்சு மிட்டாய்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், பஞ்சு மிட்டாய்க்கு கவர்ச்சிகரமான இளஞ்சிவப்பு நிறத்தை அளிக்க ‘ரோடமைன் பி’ (Rhodamine B) என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது. இந்த ரசாயனம் பொதுவாகத் துணிகளுக்குச் சாயம் ஏற்றவும், தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுபவை. மனிதர்கள் இதனை உட்கொள்ளும் போது கல்லீரல் பாதிப்பு மற்றும் புற்றுநோய் (Cancer) ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பொதுமக்களின், குறிப்பாகக் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு உணவு பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி முகமது யாசின் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்: பஞ்சு மிட்டாய் மற்றும் 'ரோடமைன் பி' கலந்த எவ்வித உணவுப் பொருட்களையும் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. இத்தகைய பொருட்களைச் சேமித்து வைப்பதும் சட்டப்படி குற்றமாகும்.

ஏற்கனவே அமலில் இருந்த ஓராண்டு காலத் தடை முடிவுக்கு வந்த நிலையில், தற்போது மேலும் ஓராண்டுக்கு (2026 இறுதி வரை) இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்குச் சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் இத்தகைய வண்ணப் பொடிகள் கலந்த உணவுகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
