உஷார் மக்களே... தமிழகத்தில் குளிரால் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு - சுகாதாரத்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்வதால், கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த திடீர் பருவநிலை மாற்றத்தால், மாநிலம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாகச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தேங்கி நிற்கும் மழைநீரால் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்குவதால், டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், டெங்கு பாதிப்பும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சலுடன் சேர்த்து உடல் சோர்வு, வறட்டு இருமல், தொண்டை வலி, சளி போன்ற பாதிப்புகளுடன் தினமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காகச் செல்கின்றனர்.

தொடர் மழை மற்றும் நோய்ப் பரவல் அபாயம் குறித்துப் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் சில முக்கியமான ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்: தொடர்ந்து பெய்து வரும் மழையால், பொது விநியோகத்தில் வழங்கப்படும் குடிநீர் மாசுபட வாய்ப்புள்ளது. எனவே, அனைத்துக் குடிநீர்த் தொட்டிகளிலும் போதிய அளவில் குளோரின் கலந்து விநியோகத்தை உறுதி செய்ய, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சிப் பருக வேண்டும்.
'லெப்டோஸ் பைரா' எனப்படும் பாக்டீரியாவால் எலிக் காய்ச்சல் (Leptospirosis) ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், தேங்கியிருக்கும் மழைநீரில் வெறுங்கால்களுடன் நடக்கக் கூடாது. வெளி இடங்களில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் கை, கால்களைச் சுத்தமான நீரில் சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். டெங்கு பாதிப்பு அடுத்த மாதம் குறையக்கூடும்.

வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நீரிழப்புப் பிரச்சினைகள் தொடர்பாகப் பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் அவர்கள் கூறியது: "அரசு மருத்துவமனைகளில் ஓ.ஆர்.எஸ் (ORS) பவுடா் இலவசமாகக் கிடைக்கிறது. மழை நேரத்தில் வெளியில் செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே 200 மில்லி குடிநீரைக் காய்ச்சி, குளிர்ந்த பிறகு, அதில் ஒரு சிட்டிகை உப்பு, 4 சிட்டிகை சர்க்கரை போட்டுக் குடிக்கலாம். இதனால் நீர்ச்சத்து குறைபாடு வராது."
இன்று டிசம்பர் 4ம் தேதி காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
